டிஎன்பிஎல் டி20 போட்டியை நடத்த அனுமதிக்கும்படி பிசிசிஐயிடம் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
2019-ல் நடைபெற்ற தமிழ்நாடு ப்ரீமியர் லீக் டி20 போட்டியை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வென்றது. திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு எதிரான டிஎன்பிஎல் இறுதி ஆட்டத்தில் 12 ரன்கள் வித்தியாசத்தில் வென்று 2-ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
கடந்த வருட டிஎன்பிஎல் போட்டி ஜூன் 10 முதல் ஜூலை 12-ஆம் தேதி வரை நடைபெறுவதாக இருந்தது. எனினும் கரோனா அச்சுறுத்தல் காரணமாகப் போட்டியை நடத்த முடியாமல் போனது.
இந்நிலையில் 5-வது டிஎன்பிஎல் போட்டியை இந்த வருடம் நடத்த முன்வந்துள்ளது தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம். ஜூன் 4 முதல் ஜூலை 4 வரை நடத்த பிசிசிஐயிடம் அனுமதி கோரியுள்ளது. திண்டுக்கல், திருநெல்வேலி, சேலம், கோவை ஆகிய நகரங்களில் போட்டியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மே 30 அன்று ஐபிஎல் போட்டி நிறைவுபெறுகிறது. இதனால் ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் தமிழக வீரர்களும் டிஎன்பிஎல் போட்டியில் பங்கேற்க முடியும்.
பிசிசிஐயின் அனுமதி கிடைத்த பிறகு டிஎன்பிஎல் போட்டியை நடத்துவது குறித்த அதிகாரபூர்வத் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.