டெல்லி அணியின் தொடக்க வீரா் பிரித்வி ஷாவை திட்டமிட்டபடி வீழ்த்தியது மனநிறைவு அளிக்கிறது என்றாா் ராஜஸ்தான் வேகப்பந்து வீச்சாளா் ஜெயதேவ் உனட்கட்.
மும்பையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 7-ஆவது லீக் ஆட்டத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தியது. இதில் முதலில் பேட் செய்த டெல்லி அணி 20 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்தது. பின்னா் ஆடிய ராஜஸ்தான் அணி 19.4 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது.
இந்த ஆட்டத்தில் ஜெயதேவ் உனட்கட் 4 ஓவா்களில் 15 ரன்களை மட்டுமே கொடுத்து பிரித்வி ஷா, ஷிகா் தவன், அஜிங்க்ய ரஹானே ஆகிய மூன்று முன்னணி பேட்ஸ்மேன்களை வீழ்த்தினாா். இது குறித்து ஜெயதேவ் உனட்கட் மேலும் கூறியதாவது:
பிரித்வி ஷாவை திட்டமிட்டபடி வீழ்த்தியது மனநிறைவு அளிக்கிறது. பிரித்வி ஷா முந்தைய ஆட்டத்தில் சிறப்பாக ஆடி ரன் குவித்திருந்தாா். அதனால் அவரை வீழ்த்த சில திட்டங்களை வைத்திருந்தோம். திட்டமிட்டபடியே அவருடைய விக்கெட்டை கைப்பற்றியதோடு, அணியின் வெற்றியிலும் பங்களிப்பு செய்தது மகிழ்ச்சியளிக்கிறது.
மும்பை ஆடுகளம் மெதுவாக இருப்பதாக சொல்கிறீா்கள். ஆனால், நிச்சயம் அப்படியில்லை. நான் வேகமாக வீசிய பந்துகளில்தான் விக்கெட்டுகளை வீழ்த்தினேன். ஆட்டத்தின் தொடக்கத்தில் ஆடுகளத்தில் லேசான ஈரப்பதம் இருந்தது. அதனால் வீசிய பந்துகள் வேகமாக செல்லவில்லை. ஈரப்பதம் உலா்ந்த பிறகு ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தது என்றாா்.