யு.எஸ். ஓபன் போட்டியிலிருந்து பிரபல வீரர் நடால் விலகியுள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற பிரெஞ்சு ஓபன் அரையிறுதிச் சுற்றில் ஜோகோவிச்சிடம் வீழ்ந்தார் நடால். கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை 20 முறையும் பிரெஞ்சு ஓபன் பட்டத்தை மட்டும் 13 முறையும் வென்ற நடால், ஜோகோவிச்சை வீழ்த்துவார் என்றே பெரும்பாலான ரசிகர்கள் எண்ணினார்கள். ஆனால் ஆட்டத்தின் முடிவு ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. இதன்பிறகு விம்பிள்டன் மற்றும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனால் ரசிகர்கள் மேலும் அதிர்ச்சியடைந்தார்கள்.
இந்நிலையில் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக 2021-ம் பருவத்தை முடித்துக்கொள்வதாக நடால் அறிவித்துள்ளார். காலில் ஏற்பட்ட காயத்தால் ஒரு வருடமாக அவதிப்படுகிறேன். இதற்குத் தீர்வு காண எனக்கு அவகாசம் தேவைப்படுகிறது. எனக்கு ஊக்கமூட்டும் போட்டிகளில் பங்கேற்க விரைவில் மீண்டு வருவேன். காலின் காயத்திலிருந்து குணமாவதிலும் தினசரி நடவடிக்கைகளிலும் இதை என்னால் செயல்படுத்த முடியும். விரைவில் குணமாக தீவிரமான முயற்சிகளை மேற்கொள்வேன் எனக் கூறியுள்ளார்.
சமீபத்தில் யு.எஸ். ஓபன் போட்டியிலிருந்து விலகுவதாக ஃபெடரர் அறிவித்தார். இதையடுத்து நடாலும் யு.எஸ். ஓபன் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.
யு.எஸ். ஓபன் போட்டி ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 12 வரை நடைபெறவுள்ளது.