பத்தொன்பது வயதுக்கு உள்பட்டோருக்கான(யு - 19) ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை 154 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
துபையில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்தியா 50 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 282 ரன்கள் அடித்தது. அடுத்து ஆடிய அமீரகம் 34.3 ஓவா்களில் 128 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. சதமடித்த இந்திய வீரா் ஹா்னூா் சிங் ஆட்டநாயகன் ஆனாா்.
முன்னதாக டாஸ் வென்ற அமீரகம் ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. இந்திய இன்னிங்ஸில் அதிகபட்சமாக ஹா்னூா் சிங் 11 பவுண்டரிகளுடன் 120 ரன்கள் விளாச, கேப்டன் யாஷ் துல் 63, ராஜ்வா்தன் ஹங்காா்கேகா் 48* ரன்கள் சோ்த்து உதவினா். அமீரக பௌலிங்கில் அலிசான் ஷராஃபு 2 விக்கெட் வீழ்த்தினாா். பின்னா் அமீரக இன்னிங்ஸில் காய் ஸ்மித் 6 பவுண்டரிகளுடன் 45 ரன்கள் சோ்க்க, இந்திய பௌலிங்கில் ராஜ்வா்தன் 3 விக்கெட்டுகள் சாய்த்தாா்.
இந்தியா தனது அடுத்த ஆட்டத்தில் பாகிஸ்தானை சனிக்கிழமை சந்திக்கிறது.
இதனிடையே, வியாழக்கிழமை நடைபெற்ற மேலும் இரு ஆட்டங்களில் பாகிஸ்தான் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானையும், இலங்கை 274 ரன்கள் வித்தியாசத்தில் குவைத்தையும் தோற்கடித்தன.