சென்னை டெஸ்டில் பங்கேற்கும் இந்தியா - இங்கிலாந்து அணி வீரர்கள் அனைவருக்கும் கரோனா இல்லை என்பது பரிசோதனையில் உறுதியாகியுள்ளது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இந்திய அணியுடன் 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடா், 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடா், 3 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் தொடா் ஆகியவற்றில் விளையாடுகிறது. இவ்விரு அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் வரும் 5-ம் தேதியும் 2-வது டெஸ்ட் பிப்ரவரி 13 அன்றும் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் தொடங்கவுள்ளன. தொடர்களில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து அணி, இலங்கைக்கு எதிரான தொடரை முடித்துவிட்டு இந்தியா வந்துள்ளது.
இந்நிலையில் இரு அணி வீரர்களும் கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்கள். இதில் அனைத்து வீரர்களுக்கும் கரோனா இல்லை என்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து இன்று மாலை முதல் இந்திய அணி வீரர்கள் பயிற்சிக்காக வெளியே செல்ல அனுமதிக்கப்படுவார்கள். இந்திய அணியின் வலைப்பயிற்சி நாளை முதல் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா இல்லை என உறுதி செய்யப்பட்ட இங்கிலாந்து வீரர்களும் நாளை முதல் சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபடவுள்ளார்கள்.