பிசிசிஐ கோரிக்கையை ஏற்று தமிழக அணியிலிருந்து நடராஜன் விடுவிப்பு

விஜய் ஹசாரே ஒருநாள் போட்டிக்கான தமிழக அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
பிசிசிஐ கோரிக்கையை ஏற்று தமிழக அணியிலிருந்து நடராஜன் விடுவிப்பு

பிசிசிஐயின் கோரிக்கையை ஏற்று விஜய் ஹசாரே போட்டிக்கான தமிழக அணியிலிருந்து இடது கை வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் விடுவிக்கப்பட்டுள்ளார்.

சேலம் மாவட்டம், சின்னப்பம்பட்டியைச் சோ்ந்த நடராஜன் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் போட்டித் தொடரில் பங்கேற்கச் சென்றாா். அங்கு டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகளில் அறிமுகமானார். பின்னா் தனது சொந்த ஊரான சின்னப்பம்பட்டிக்கு திரும்பினாா். இளைஞா்கள், ஊா் பொதுமக்கள் நடராஜனுக்குப் பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனா். இரண்டு வெள்ளைக் குதிரைகள் பூட்டப்பட்ட சாரட் வண்டியில் ஏற்றப்பட்ட நடராஜன், அங்கு திரண்டிருந்த மக்கள் வெள்ளத்தின் நடுவே ஊா்வலமாக அழைத்துச் செல்லப்பட்டாா்.

சமீபத்தில் நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 போட்டியின் இறுதி ஆட்டத்தில் தமிழகம் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பரோடாவை வீழ்த்தி சாம்பியன் ஆனது. இப்போட்டியில் தமிழகம் சாம்பியன் ஆவது இது 2-ஆவது முறை. முன்னதாக 2006-07 காலகட்டத்தில் தமிழகம் இதேபோல் கோப்பையை வென்றிருந்தது.

விஜய் ஹசாரே ஒருநாள் போட்டிக்கான தமிழக அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. தினேஷ் கார்த்திக் தலைமையிலான அணியில் வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் இடம்பிடித்தார். விஜய் ஹசாரே ஒருநாள் போட்டி, பிப்ரவரி 20 முதல் மார்ச் 14 வரை நடைபெறுகிறது. இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள், டி20 தொடர்களில் நடராஜன் நிச்சயம் இடம்பெற இருப்பதால் தற்போது ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது. 

இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர், மார்ச் 8 அன்று நிறைவுபெறுகிறது. 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் ஆமதாபாத்தில் மார்ச் 12 முதல் 20 வரை நடைபெறுகிறது. ஒருநாள் தொடர் புணே நகரில் மார்ச் 23 முதல் 28 வரை நடைபெறுகிறது. 

தமிழக அணி சார்பாக விஜய் ஹசாரே ஒருநாள் போட்டியில் நடராஜன் விளையாட நேர்ந்தால் அவர் சோர்வடையவும் காயத்தில் சிக்கிக்கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது. மேலும் கரோனா பாதுகாப்பு வளையத்தில் இருக்க வேண்டிய நிலைமையும் ஏற்படும். இதற்குப் பிறகு இங்கிலாந்து தொடருக்காகவும் அவர் மற்றொரு பாதுகாப்பு வளையத்துக்குள் இருக்க வேண்டிய சூழல் உருவாகும். இந்த அம்சங்களைக் கருத்தில் கொண்டு விஜய் ஹசாரே ஒருநாள் போட்டிக்கான தமிழக அணியிலிருந்து நடராஜனை விடுவிக்குமாறு பிசிசிஐ கோரிக்கை விடுத்தது. இதையடுத்து தமிழக ஒருநாள் அணியிலிருந்து நடராஜன் விடுவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாதமிக்குச் சென்று நடராஜன் பயிற்சியில் ஈடுபடவுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com