இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்டிலிருந்து விலகினார் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா!

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்டிலிருந்து விலகினார் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா!

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்டிலிருந்து வேகப்பந்து வீச்சாளர் பும்ரா விலகியுள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இந்திய அணிக்கு எதிராக 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது. 2-வது டெஸ்டை 317 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி தொடரை 1-1 என சமன் செய்தது. 3-வது டெஸ்ட், பகலிரவு ஆட்டமாக ஆமதாபாத்தில் நடைபெற்றது.

முற்றிலும் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாகவே இருந்த ஆமதாபாத் ஆடுகளத்தில் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்தை 112 ரன்களுக்கு கட்டுப்படுத்திய இந்தியா, ஜோ ரூட் 5 விக்கெட்டுகள் எடுத்து அற்புதமாகப் பந்துவீசியதால் முதல் இன்னிங்ஸில் 145 ரன்களுக்கு வீழ்ந்தது. 2-ஆவது இன்னிங்ஸில் இங்கிலாந்தை 81 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா, 49 ரன்கள் வெற்றி இலக்கை 2-ஆம் நாளிலேயே எட்டி ஆட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது. 11 விக்கெட்டுகள் எடுத்த அக்ஸா் படேல் ஆட்டநாயகன் ஆனாா். 

மொத்தம் 4 ஆட்டங்களைக் கொண்ட இந்தத் தொடா், தற்போது 2-1 என இந்தியாவுக்குச் சாதகமாக உள்ளது. 4-வது டெஸ்ட், மார்ச் 4 அன்று ஆமதாபாத்தில் தொடங்குகிறது.

இந்நிலையில் 4-வது டெஸ்டிலிருந்து சொந்தக் காரணங்களுக்காக பும்ரா விலகியுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இதையடுத்து 4-வது டெஸ்டில் இந்திய அணியில் உமேஷ் யாதவ் அல்லது சிராஜ் என இருவரில் ஒருவர் இடம்பிடிப்பார் எனத் தெரிகிறது.

3-வது டெஸ்டில் பும்ரா மொத்தமாக 6 ஓவர்கள் மட்டுமே வீசினார். 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரிலிருந்து பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் அடுத்த மாதம் புணேவில் நடைபெறவுள்ள 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் பும்ரா பங்கேற்கவுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com