இங்கிலாந்துக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் அடித்த சதத்தைவிட ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மெல்போர்ன் டெஸ்டில் அடித்த சதமே சிறப்பானது என அஜின்க்யா ரஹானே தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று வரலாற்றுச் சாதனை படைத்ததற்கு முக்கியக் காரணமாக இருந்தவர் கேப்டன் ரஹானே. அடிலெய்ட் தோல்விக்குப் பிறகு மெல்போர்ன் டெஸ்டில் சதமடித்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்களிப்பை ஆற்றினார்.
இதுபற்றி ஸ்போர்ட்ஸ் டுடேவிடம் பேசிய ரஹானே கூறியது:
"நான் எப்போது ரன் அடித்து அணி வெற்றி பெற்றாலும் அது எனக்கு மிகவும் சிறப்பான ஒன்று. சொந்த சாதனைகளைவிட டெஸ்ட் ஆட்டத்தையும், டெஸ்ட் தொடரையும் வெல்வதே எனக்கு முதன்மையானது. ஆனால், மெல்போர்ன் டெஸ்ட் சதம் உண்மையில் சிறப்பானது. லார்ட்ஸ் மைதானத்தில் அடித்த சதமே சிறப்பானது என்று மெல்போர்னில் கூறினேன். ஆனால், நிறைய பேர் லார்ட்ஸ் சதத்தைவிட மெல்போர்ன் சதமே சிறப்பானது என்றனர்.
இதற்கு எப்படி பதிலளிக்க வேண்டும் என்று தெரியவில்லை. ஆனால் இப்போது உணர்கிறேன், அடிலெய்ட் டெஸ்டுக்குப் பிறகான சூழலைப் பார்த்தால் அந்தத் தொடரில் மெல்போர்ன் டெஸ்ட் மிகவும் முக்கியமானது. எனவே, மெல்போர்னில் விளையாடிய இன்னிங்ஸ்தான் உண்மையில் சிறப்பானது."