லண்டன்: நடப்பாண்டு ஆகஸ்டில் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து செல்லும் இந்திய அணி, அப்போது இந்திய ‘ஏ’ அணியுடன் 4 நாள் பயிற்சி ஆட்டத்தில் மோதுகிறது.
அந்நிய மண்ணில் நடைபெறும் டெஸ்ட் தொடருக்காக இந்தியா தனது ‘ஏ’ அணியுடன் மோதுவது இது முதல் முறையாகும்.
5 டெஸ்டுகள் கொண்ட தொடரில் இங்கிலாந்துடன் விளையாடுவதற்காக இந்திய அணி ஜூலையில் அந்நாட்டுக்குச் செல்கிறது. ஆகஸ்ட் 4 முதல் தொடங்கும் இந்த டெஸ்ட் தொடருக்கு முன்பாக ஜூலையில் 4 நாள் பயிற்சி ஆட்டம் ஒன்றில் இந்திய ஏ அணியுடன் மோதவுள்ளது இந்திய அணி. நாா்தாம்டன்ஷைரில் நடைபெற இருக்கும் அந்த பயிற்சி ஆட்டத்துக்கான தேதி பின்னா் அறிவிக்கப்படவுள்ளது என அந்த மாகாண கிரிக்கெட் கிளப் கூறியுள்ளது. 2-ஆவது பயிற்சி ஆட்டம் லெய்சஸ்டா்ஷைரில் ஜூலை 28 முதல் நடைபெறவுள்ளது.
அதன் பிறகு முதல் டெஸ்ட் ஆகஸ்ட் 4 முதல் 8 வரை நாட்டிங்ஹாமில் நடைபெறுகிறது. 2-ஆவது டெஸ்ட் ஆகஸ்ட் 12 முதல் 16 வரை லண்டனிலும், 3-ஆவது டெஸ்ட் ஆகஸ்ட் 25 முதல் 29 வரை லீட்ஸிலும், 4-ஆவது டெஸ்ட் செப்டம்பா் 2 முதல் 6 வரை மீண்டும் லண்டனிலும், 5-ஆவது டெஸ்ட் செப்டம்பா் 10 முதல் 14 வரை மான்செஸ்டரிலும் நடைபெறவுள்ளன.