ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டி20 ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம், 4-1 என்ற கணக்கில் தொடரை வென்று அசத்தியுள்ளது மேற்கிந்தியத் தீவுகள்.
மேற்கிந்தியத் தீவுகள், ஆஸ்திரேலியா இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 ஆட்டம் இந்திய நேரப்படி சனிக்கிழமை அதிகாலை தொடங்கியது. டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் கேப்டன் நிகோலஸ் பூரன் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு அதிரடி தொடக்கத்தை தந்த லீவிஸ் சிறப்பான அடித்தளத்தை அமைத்தார்.
அவர் 34 பந்துகளில் 4 பவுண்டரிகள், 9 சிக்ஸர்கள் உள்பட மொத்தம் 79 ரன்கள் விளாசினார்.
இவருக்கு அடுத்தபடியாக கேப்டன் பூரன் 31 ரன்கள் எடுத்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அந்த அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்தது.
200 ரன்கள் என்ற கடினமாக இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியாவுக்கு மீண்டும் தொடக்கம் சரியாக அமையவில்லை. முதல் ஓவரிலேயே ஜோஷ் பிலிப்பி ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இதன்பிறகு, பேட்ஸ்மேன்கள் அதிரடி காட்டினாலும் அதைப் பெரிய ஸ்கோராக மாற்றத் தவறினர். அதிகபட்சமாக கேப்டன் ஆரோன் பின்ச் மட்டும் 34 ரன்கள் எடுத்தார்.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 183 ரன்கள் மட்டுமே எடுத்த ஆஸ்திரேலியா 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இதன்மூலம், 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரை மேற்கிந்தியத் தீவுகள் 4-1 என்ற கணக்கில் வென்றது.
ஆட்டநாயகன் விருதை எவின் லீவிஸும், தொடர் நாயகன் விருதை ஹேடன் வால்ஷும் தட்டிச் சென்றனர்.