இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தருக்கு விரலில் காயம் ஏற்பட்டுள்ளதால் டெஸ்ட் ஆட்டங்களில் அவர் விளையாடமாட்டார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியா, கவுன்டி லெவன் XI அணிகளுக்கிடையே 3 நாள் பயிற்சி ஆட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்தில் இந்திய கேப்டன் விராட் கோலி மற்றும் அஜின்க்யா ரஹானே காயம் காரணமாக விளையாடவில்லை. ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி களமிறங்கியது.
இந்திய வீரர்கள் ஆவேஷ் கான், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் கவுன்டி அணிக்காகக் களமிறங்கினர். இதில் ஆவேஷ் கானுக்கு இடதுகை கட்டை விரலில் காயம் ஏற்பட்டதால் பயிற்சி ஆட்டத்தின் 2-வது மற்றும் 3-வது நாள் ஆட்டத்தில் அவர் பங்கேற்கமாட்டார் என பிசிசிஐ ஏற்கெனவே அறிவித்தது.
இந்த நிலையில் வாஷிங்டன் சுந்தரின் விரலிலும் காயம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதுபற்றி தகவலறிந்த வட்டாரம் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் கூறியது:
"சுந்தரின் விரலில் காயம் ஏற்பட்டுள்ளது. அவர் முழுமையாகக் குணமடைய சுமார் 6 வாரங்கள் தேவைப்படும். டெஸ்ட் ஆட்டங்களில் அவர் விளையாடமாட்டார்."
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷுப்மன் கில் பயிற்சி ஆட்டம் தொடங்குவதற்கு முன்பே காயம் காரணமாக நாடு திரும்பியது குறிப்பிடத்தக்கது.