இந்தியாவுக்கு எதிரான 2 வது டி-20 ஆட்டத்தில் நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா - நியூஸிலாந்து அணிகள் இடையேயான டி20 தொடரின் 2-ஆவது ஆட்டம் ராஞ்சியில் இன்று நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டது. வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜுக்கு பதிலாக ஹர்ஷல் படேல் சேர்க்கப்பட்டுள்ளார்.
அதேசமயம் நியூசிலாந்து அணியில் பெர்குசானுக்குப் பதிலாக, ஆதம் மில்னேக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து நியூசிலாந்து அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக குப்தில், மிட்செல் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குப்தில் 15 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க அடுத்து மார்க் சாப்மன் களமிறங்கினார்.
மிட்செலும், மார்க் சாப்மனும் அணியின் ஸ்கோர் குறையாமல் பார்த்துக்கொண்டனர். சாப்மன் 21 ரன்கள் எடுத்திருந்தபோது அக்ஸர் படேல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த பிலிப்ஸும் தன் பங்கிற்கு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்தது. இந்திய தரப்பில் அதிகபட்சமாக ஹர்ஷல் படேல் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.