சிஎஸ்கே வீரர்கள் பயணிகள் விமானத்தில் பயணம்?
சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் (சிஎஸ்கே) மான்செஸ்டரிலிருந்து பயணிகள் விமானம் மூலம் துபைக்கு வரவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கிடையே இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கவிருந்த கடைசி டெஸ்ட் ஆட்டம் கரோனா அச்சுறுத்தல் காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, இங்கிலாந்திலுள்ள சிஎஸ்கே வீரர்களை துபைக்கு அழைத்து வரும் முயற்சியில் அணி நிர்வாகம் இறங்கியுள்ளது. ரவீந்திர ஜடேஜா, சேத்தேஷ்வர் புஜாரா, ஷர்துல் தாக்குர், மொயீன் அலி மற்றும் சாம் கரண் ஆகியோர் இங்கிலாந்தில் உள்ளனர்.
இதுபற்றி சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசியது:
"தனி விமானம் என்பது இனிமேல் சாத்தியமில்லை. பயணிகள் விமானத்தில் நாளை டிக்கெட் வாங்க முயற்சித்து வருகிறோம். அவர்கள் துபை வந்து இறங்கியவுடன் மற்ற வீரர்களைப் போல தனிமைப்படுத்தப்படுவார்கள்."