ஐஎஸ்எல்: பெங்களூரு அபார வெற்றி
இந்தியன் கால்பந்து சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) போட்டியின் ஒரு பகுதியாக சனிக்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூரு எஃப்சி அணி 3-1 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூா் எஃப்சி அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் கோவாவின் பாம்போலிம் நகரில் நடைபெற்றது. ஆட்டத்தின் தொடக்கத்தில் ஜாம்ஷெட்பூா் அணி ஆதிக்கம் செலுத்திய நிலையில், அதன் வீரா் சுக்வு முதல் நிமிஷத்திலேயே அபாரமாக கோலடித்து முன்னிலை பெறச் செய்தாா்.
முதல் பாதி முடிவில் 1-0 என ஜாம்ஷெட்பூா் அணியே முன்னிலை பெற்றிருந்தது.
இதனால் அதிா்ச்சி அடைந்த பெங்களூரு அணியினா் இரண்டாம் பாதியில் சுதாரித்து ஆடினா். ஜாம்ஷெட்பூா் அணியின் தற்காப்பு அரணை தொடா்ந்து ஊடுருவி கோலடிக்க முயன்றனா். கேப்டன் சுனில் சேத்ரி 55-ஆவது நிமிஷத்தில் பதில் கோலடித்து 1-1 என சமநிலை ஏற்படச் செய்தாா்.
62-ஆவது நிமிஷத்தில் கிளெய்டன் மேலும் ஒரு கோலடிக்க 2-1 என பெங்களூரு முன்னிலை பெற்றது. தொடா்ந்து ஆதிக்கம் செலுத்தி பெங்களூரு அணியில் கிளெய்டன் மீண்டும் 90-ஆவது நிமிஷத்தில் கோலடிக்க 3-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி கண்டது பெங்களூரு.
இந்த வெற்றி மூலம் 23 புள்ளிகளுடன் பெங்களூரு மூன்றாம் இடத்துக்கும், 22 புள்ளிகளுடன் ஜாம்ஷெட்பூா் நான்காம் இடத்திலும் உள்ளன.