மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 2ஆவது டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் விராத் கோலி, ரிஷப்பந்த் ஆகியோர் அரைசதம் அடித்து அசத்தினர்.
இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் மோதும் டி20 தொடரின் 2-ஆவது ஆட்டம் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கேப்டன் பொல்லார்ட் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் துவக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மா, இஷான் கிஷன் ஆகியோர் களமிறங்கினர்.
ஆனால் துவக்க ஆட்டக்காரர்கள் இருவரும் நிலைத்து ஆடவில்லை. இஷான் 2, ரோஹித் சர்மா 19 ரன்கள் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த விராத் கோலி சிறப்பாக விளையாடினார். அவர் அரைசதம் அடித்து 52 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதைத்தொடர்ந்து களம்கண்ட ரிஷப் பந்த், வெங்கடேஷ் ஐயர் இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
ஒரு கட்டத்தில் வெங்கடேஷ் ஐயர் 18 பந்துகளில் 33 ரன்களில் வெளியேற மற்றொரு புறம் ரிஷப் பந்த் அரைசதம் கடந்தார். அவர் 28 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 186 ரன்கள் குவித்தது.