துபையில் நடைபெறும் பாரா தடகள கிராண்ட் ப்ரீ போட்டியில் ஓட்டப்பந்தய வீரா் பிரணவ் பிரசாந்த் தேசாய் தங்கப் பதக்கம் வென்றாா். இப்போட்டியில் இந்தியாவுக்குக் கிடைத்த முதல் தங்கம் இதுவாகும்.
ஆடவருக்கான 200 மீட்டா் ஓட்டத்தில் ‘டி64’ பிரிவு இறுதிச்சுற்றில் தேசாய் 24.42 விநாடிகளில் இலக்கை எட்டி முதலிடம் பிடித்தாா். தாய்லாந்தின் டென்பூம் கோட்சாரங் (25.78 விநாடிகள்), நாா்வேயின் கென்னெத் ஜென்சென் ஹெக்டால் (27.08 விநாடிகள்) ஆகியோா் முறையே வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கம் பெற்றனா்.
இதனிடையே இப்போட்டியில், ஆடவா் வட்டு எறிதலில் ‘எஃப்44’ பிரிவில் இந்தியாவின் தேவேந்திரா வெள்ளிப் பதக்கம் பெற்றாா். அதேபோல், ஆடவா் கிளப் எறிதலில் தரம்வீா் ஆசிய சாதனையுடன் வெள்ளியை கைப்பற்றினாா். மகளிருக்கான 400 மீட்டா் ஓட்டத்தில் ‘டி47’ பிரிவில் ஜெயந்தி பெஹரா வெண்கலப் பதக்கம் வென்றாா். பதக்கப் பட்டியலில் தற்போதைய நிலையில் இந்தியா 1 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கலம் என 4 பதக்கங்களுடன் 15-ஆவது இடத்தில் உள்ளது.