லிவிங்ஸ்டன் அரைசதம் வீண்: பஞ்சாபை எளிதில் வீழ்த்திய சன்ரைசர்ஸ்
By DIN | Published On : 17th April 2022 07:26 PM | Last Updated : 18th April 2022 05:57 PM | அ+அ அ- |

பஞ்சாப் கிங்ஸ் எதிரான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடரின் 28ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தின. மும்பையின் டி ஒய் பாட்டீல் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தார். பஞ்சாப் அணியின் கேப்டன் மயங் அகர்வால் காயம் காரணமாக இன்றைய போட்டியில் களமிறங்கவில்லை. அவருக்கு பதிலாக ஷிகர் தவான் கேப்டன் பொறுப்பை கவனிக்கிறார்.
பஞ்சாப் கிங்ஸ் அணியில் லியாம் லிவிங்ஸ்டன், ஷாரூக்கான் ஆகியோரைத் தவிர யாரும் சொல்லிக்கொள்ளும்படி விளையாடவில்லை. அதிரடியாக விளையாடிய லிவிங்ஸ்டன் 33 பந்துகளில் 60 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஷாரூக்கான் தன் பங்கிற்கு 26 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். இதனால் பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 151 ரன்கள் மட்டுமே எடுத்தது. சன்ரைசர்ஸ் அணியில் அதிகபட்சமாக உம்ரான் மாலிக் 4, புவனேஷ்குமார் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதையும் படிக்க- ஏப்.24-ல் கிராம சபைக் கூட்டம்
152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் சன்ரைசர்ஸ் அணி களமிறங்கியது. அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் ஷர்மா, கேன் வில்லியம்சன் ஆகியோர் களமிறங்கினர். ஆனால் வில்லியம்சன் 9 ரன்கள் எடுத்திருந்தபோது ரபாடா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து ராகுல் திரிபாதி களம்கண்டார். திரிபாதி 22 பந்துகளில் 34 ரன்களுக்கு தனது விக்கெட்டை பறிகொடுத்தார். தொடர்ந்து அபிஷேக் ஷர்மாவும் 31 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
அடுத்து வந்த எய்டன் மார்க்கரம், நிக்கோலஸ் பூரன் இருவரும் சிறப்பாக விளையாடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 18.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 152 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. மார்க்கரம் 41(27), பூரன்35(30) ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.