
கிரிக்கெட் வரைபடத்தில் நார்வேக்கு ஓர் இடமிருந்தாலும் தரவரிசையில் அது மிகவும் பின்தங்கியுள்ளது. டி20 தரவரிசையில் 48-வது இடத்தையே பெற்றுள்ளது.
இதனால் நார்வே நாட்டைச் சேர்ந்த உலக செஸ் சாம்பியன் மேக்னஸ் கார்ல்சன், திடீரென கிரிக்கெட்டைப் பற்றி பேசினால் ஆச்சர்யமாகத்தானே இருக்கும்.
அபி அண்ட் நியூ என்கிற யூடியூப் சேனல் மூலம் பிரபலமான இருவர், தங்களுடைய ட்விட்டர் கணக்கில் ஒரு ட்வீட்டை வெளியிட்டார்கள். செஸ் தான் புதிய கிரிக்கெட். இது தவறு என நிரூபியுங்கள் என்றார்கள்.
சென்னையில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட், பிரக்ஞானந்தா, குகேஷ் போன்ற இளம் வீரர்களுடைய சாதனைகள், தொடர் வெற்றிகள் போன்ற காரணங்களால் சமீபகாலமாக செஸ் ஆட்டங்களுக்கான ரசிகர்கள் அதிகமாகி வருகிறார்கள். இதனால் கிரிக்கெட் போல செஸ்ஸும் இளைஞர்கள் மத்தியில் புகழ் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் அடிப்படையில் அபி அண்ட் நியூ, அந்த ட்வீட்டை வெளியிட்டார்கள் எனத் தெரிகிறது.
இந்த ட்வீட்டுக்குப் பதில் அளித்து ஆச்சர்யப்படுத்தியுள்ளார் உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சன். ட்விட்டரில் அவர் கூறியதாவது:
செஸ், கிரிக்கெட்டல்ல என்பதற்கு நான்கு காரணங்கள்.
கிரிக்கெட் ஆடுகளத்தில் மனிதர்களால் விளையாடப்படுவது. செஸ், பலகையினால் மரத்தினால் செய்யப்பட்ட காய்களால் விளையாடப்படுவது.
கிரிக்கெட் விளையாட்டில் பேட், பந்து உள்ளன. செஸ்ஸில் அவை கிடையாது.
கிரிக்கெட் ஆட்டத்துக்கு 22 வீரர்கள் தேவைப்படுவார்கள். செஸ்ஸில் இரண்டு பேர் தான். என்னால் கிரிக்கெட் விளையாட முடியாது என்று பதில் சொல்லியுள்ளார்.