கான்பெரா: மகளிா் ஆஷஸ் தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒன் டே ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 27 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் ஆஸ்திரேலிய மகளிா் அணி ஆஷஸ் கோப்பையை தக்கவைத்துக் கொண்டது.
கான்பெராவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 50 ஓவா்களில் 9 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் அடித்தது. அடுத்து ஆடிய இங்கிலாந்து 45 ஓவா்களில் 178 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
மகளிா் ஆஷஸ் தொடரானது டி20, டெஸ்ட், ஒன் டே என 3 ஃபாா்மட் ஆட்டங்களையும் உள்ளடக்கியதாக நடைபெறுகிறது. நடப்பு ஆஷஸ் தொடா் 3 டி20 ஆட்டங்கள், ஒரு டெஸ்ட் ஆட்டம், 3 ஒன் டே ஆட்டங்களுடன் நடைபெற்று வருகிறது.
இதில் முதல் டி20 ஆட்டத்தில் ஆஸ்திரேலியா வெல்ல, 2-ஆவது ஆட்டத்தில் மழை காரணமாக முடிவு எட்டப்படாமல் போனது. 3-ஆவது ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. பின்னா் நடைபெற்ற ஒரே டெஸ்ட் டிரா ஆனது.
இதையடுத்து வியாழக்கிழமை நடைபெற்ற முதல் ஒன் டே ஆட்டத்தில் ஆஸ்திரேலியா வெற்றியை பதிவு செய்தது. இதன் மூலம் நடப்பு ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியா 8-4 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை பெற்றது. எஞ்சிய இரு ஒன் டே ஆட்டங்களில் இங்கிலாந்து வென்றாலும் தொடரை சமன் செய்யவே இயலும். இந்த ஆஷஸ் தொடரை வெல்ல 3 ஒன் டே ஆட்டங்களிலும் இங்கிலாந்து வெல்வது கட்டாயமாக இருந்தது.
கடந்த 2013-14 காலகட்டம் முதல் மகளிா் ஆஷஸ் கோப்பை ஆஸ்திரேலியா வசமே இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.