இலங்கைக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் முதல் பேட்டிங் செய்த இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா, இலங்கை இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் இன்று (வியாழக்கிழமை) தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை கேப்டன் தசுன் ஷனாகா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் இஷான் கிஷன் களமிறங்கினர். மேற்கிந்தியத் தீவுகள் தொடரில் திணறிய கிஷன் இந்த ஆட்டத்தில் தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால், பவர் பிளே முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 58 ரன்கள் எடுத்தது.
இதன்பிறகு, ரோஹித் சர்மாவும் அதிரடிக்கு மாறத் தொடங்கினார். கிஷனும் 30-வது பந்தில் அரைசதத்தை எட்டினார். 10 ஓவர் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 98 ரன்கள் எடுத்தது.
இதையும் படிக்க | நான் நானாக இருப்பேன்: விராட் கோலி பேட்டி
இதையடுத்து, விக்கெட் வீழ்த்துவதற்காக லஹிரு குமாரா மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டார். இதற்குப் பலனாக ரோஹித் சர்மா 44 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
ரோஹித் விக்கெட்டுக்குப் பிறகு கிஷன் மற்றும் புதிதாகக் களமிறங்கிய ஷ்ரேயஸ் சரியான டைமிங் கிடைக்காமல் சற்று தடுமாறினர்.
ஆனால், சிறிய இடைவேளையில் கிஷன் அதிரடிக்கு மாறிவிட்டார். சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் 89 ரன்களுக்கு ஷனாகா பந்தில் ஆட்டமிழந்தார்.
கடைசி நேர அதிரடிக்கு ரவீந்திர ஜடேஜா களமிறக்கப்பட்டாலும், அந்த பொறுப்பை ஷ்ரேயஸ் ஏற்றுக்கொண்டார்.
16-வது ஓவர் முடிவில் 10 பந்துகளில் 11 ரன்கள் எடுத்திருந்த ஷ்ரேயஸ் படிப்படியாக கியரை மாற்றி ஸ்கோரை உயர்த்தினார். இதனால், கடைசி 5 ஓவர்களில் மட்டும் இந்தியாவுக்கு 69 ரன்கள் கிடைத்தன.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்தது.
இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஷ்ரேயஸ் 28 பந்துகளில் 57 ரன்களும், ஜடேஜா 4 பந்துகளில் 3 ரன்களும் எடுத்தனர்.