அமெரிக்காவில் நடைபெறும் வேர்ல்ட் கேம்ஸ் வில்வித்தை போட்டியில் காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது.
இந்தியாவின் அபிஷேக் வர்மா/ஜோதி சுரேகா கூட்டணி அந்தப் பிரிவில், 157-156 என்ற கணக்கில் மெக்ஸிகோவின் ஆண்ட்ரியா பெகெரா/மிகேல் பெகெரா இணையை "த்ரில்' வெற்றி கண்டது.
காம்பவுண்ட் ஆடவர் தனிநபர் பிரிவில் களம் கண்ட அபிஷேக் வர்மா, காலிறுதியில் உலகின் நம்பர் 1 வீரரும், அமெரிக்காவைச் சேர்ந்தவருமான மைக் ஷ்லோசரை வீழ்த்தி அபாரம் காட்டினார். ஆனால், அரையிறுதியில் பிரான்ஸின் ஜீன் ஃபிலிப் பெüல்ச்சிடம் தோல்வி கண்ட (141-143) அவர், பின்னர் வெண்கலப் பதக்கத்துக்கான சுற்றிலும் கனடாவின் கிறிஸ்டோபர் பெர்கின்ஸிடம் வெற்றியை இழந்தார் (145-148).
அபிஷேக் அசத்தல்: இந்திய வில்வித்தை சங்கத்தின் தகவல்படி, அபிஷேக்/ஜோதி வென்றுள்ள இந்தப் பதக்கமே, வேர்ல்ட் கேம்ஸ் வில்வித்தைப் போட்டியின் (உலக கேம்ஸ்) வரலாற்றில் இந்தியாவுக்குக் கிடைத்துள்ள முதல் பதக்கமாகும்.
அத்துடன் சர்வதேச வில்வித்தை போட்டிகளில் அபிஷேக் வர்மா வென்றிருக்கும் 50-ஆவது பதக்கம் இது. தற்போது, வேர்ல்ட் கேம்ஸ், உலக சாம்பியன்ஷிப், உலகக் கோப்பை ஃபைனல், உலகக் கோப்பை, ஆசிய விளையாட்டுப் போட்டிகள், ஆசிய சாம்பியன்ஷிப் என காம்பவுண்ட் வில்வித்தை பிரிவு இடம்பெற்றுள்ள அனைத்து போட்டிகளிலும் பதக்கம் வென்ற ஒரே இந்தியர் என்ற பெருமையை அபிஷேக் பெற்றுள்ளார்.