தென் கொரியாவில் நடைபெறும் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஆடவர் ஸ்கீட் தனிநபர் பிரிவில் இந்தியாவின் மைராஜ் அகமது கான் திங்கள்கிழமை தங்கப் பதக்கம் வென்றார்.
இதன் மூலம், இப்போட்டியின் இந்தப் பிரிவில் இந்தியாவுக்கு முதல் தங்கம் வென்று தந்து அவர் வரலாறு படைத்திருக்கிறார். அவருக்கும் இப்பிரிவில் இது முதல் தங்கமாகும். இதற்கு முன், கடந்த 2016-ஆம் ஆண்டு பிரேஸிலில் நடைபெற்ற இப்போட்டியின் இதே பிரிவில் மைராஜ் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார்.
40 ஷாட்கள் கொண்ட இறுதிச்சுற்றில் மைராஜ் 37 ஷாட்களுடன் முதலிடம் பிடிக்க, தென் கொரியாவின் மின்சு கிம் 36 ஷாட்களுடன் வெள்ளியும், இங்கிலாந்தின் பென் லெவெலின் 26 ஷாட்களுடன் வெண்கலமும் பெற்றனர்.
மகளிரணிக்கு வெண்கலம்: இப்போட்டியில் மகளிர் அணிகளுக்கான 50 மீட்டர் ரைஃபிள் 3 பொசிஷன்ஸ் பிரிவில், வெண்கலப் பதக்கத்துக்கான சுற்றில் இந்தியாவின் அஞ்சும் முட்கில்/ஆஷி செüக்சி/சிஃப்ட் கெüர் சம்ரா கூட்டணி 16-6 என்ற புள்ளிகள் கணக்கில் ஆஸ்திரேலியாவின் ஷிலீன் வாய்பெல்/நாடின் உங்கெரேங்/ரெபெக்கா கோயக் அடங்கிய அணியை வீழ்த்தி பதக்கம் பெற்றது.
எனினும், ஆடவருக்கான 25 மீட்டர் ரேப்பிட் ஃபயர் பிஸ்டல் பிரிவில் விஜய்வீர் சித்து பதக்கச் சுற்றிலும், அனீஷ் மற்றும் சமீர் ரேங்கிங் சுற்றிலும் தோல்வியைத் தழுவினர். மகளிருக்கான தனிநபர் ஸ்கீட் பிரிவில் முஃபாதல் தீசாவலா 23-ஆவது இடம் பிடித்தார். பதக்கப் பட்டியலில் திங்கள்கிழமை நிலவரப்படி, இந்தியா 5 தங்கம், 5 வெள்ளி, 3 வெண்கலம் என 13 பதக்கங்களுடன் முதலிடத்தில் இருக்கிறது.