2023-2027 ஐபிஎல் போட்டிகளின் ஒளிபரப்பு உரிமை தொடர்பான இணைய வழி ஏலத்தில், ஒரு ஆட்டத்துக்கான தொகை முதல் நாளில் ரூ. 100 கோடியைத் தாண்டியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏலத்தின் இரண்டாவது நாளில் மொத்த தொகை ரூ. 50 ஆயிரம் கோடியைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2023-2027 ஐபிஎல் போட்டிகளின் ஒளிபரப்பு உரிமையைப் பெறுவதற்காக டிஸ்னி ஸ்டார், சோனி, ஸீ, வியாகாம் உள்ளிட்ட பெரிய நிறுவனங்கள் போட்டியிடுகின்றன. இந்தியாவில் ஒளிபரப்பு செய்வதற்கான உரிமை தொகுப்பு ஏ எனவும், இந்தியாவில் இணைய ஒளிபரப்பு உரிமை தொகுப்பு பி எனவும் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு ஒளிபரப்பு உரிமையையும் பெறுவதற்கானத் தொகை ரூ. 42 ஆயிரம் கோடியைத் தாண்டியுள்ளது. இது மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க | கடினமான ஆடுகளம்: இந்தியா 148 ரன்கள் சேர்ப்பு
இவற்றுக்கான ஏலம் திங்கள்கிழமையும் தொடங்கவுள்ளதால், இதன் இறுதி முடிவுகள் திங்கள்கிழமை மாலை அல்லது செவ்வாய்க்கிழமை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுபற்றி பிசிசிஐ நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
"மாலை 5.30 மணிக்குப் பிந்தைய நிலவரப்படி, தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு ஒரு ஆட்டத்துக்கான அடிப்படைத் தொகை ரூ. 49 கோடியிலிருந்து ரூ. 57 கோடிக்கு அதிகரித்துள்ளது. இணைய உரிமை நம்பமுடியாத அளவுக்கு உயர்ந்து ரூ. 33 கோடியிலிருந்து ரூ. 48 கோடியை எட்டியுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் ஒரு ஆட்டத்துக்கான ஒருங்கிணைந்த உரிமைத் தொகை ரூ. 54.5 கோடி ஆக இருந்த நிலையில், இது ஏற்கெனவே ரூ. 100 கோடியைத் தாண்டிவிட்டது. இதை நம்பவே முடியவில்லை. நாளையும் இது தொடரும்" என்றார் அவர்.