ஐபிஎல் போட்டியா? தெ.ஆ. அணியா?: விசுவாசப் பரீட்சையில் அல்லாடும் வீரர்கள்

வங்கதேசத்துக்கு எதிராக ஒருநாள் தொடரில் விளையாடவுள்ள தென்னாப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
டி காக்
டி காக்

வங்கதேசத்துக்கு எதிராக ஒருநாள் தொடரில் விளையாடவுள்ள தென்னாப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஐபிஎல் போட்டிக்குத் தேர்வான தெ.ஆ. வீரர்களும் இடம்பெற்றுள்ளார்கள்.

தென்னாப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள், 2 டெஸ்டுகளில் விளையாடுகிறது வங்கதேச அணி. ஒருநாள் தொடர் மார்ச் 18 அன்றும் டெஸ்ட் தொடர் மார்ச் 30 அன்றும் தொடங்குகின்றன.

இந்நிலையில் ஒருநாள் தொடருக்கான தெ.ஆ. அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஐபிஎல் போட்டியில் விளையாடவுள்ள 8 வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளார்கள். நோர்கியா, மகாலா ஆகிய இருவரும் காயம் காரணமாக அணியில் இடம்பெறவில்லை. 

ஒருநாள் தொடர் ஐபிஎல் தொடங்குவதற்கு மூன்று நாள்களுக்கு முன்பு, மார்ச் 23 அன்று நிறைவுபெறுகிறது. இதனால் ஒருநாள் தொடரில் இடம்பெற்றுள்ள ரபாடா, என்கிடி, வான் டர் டுசென், டேவிட் மில்லர், குயிண்டன் டி காக், மார்க்ரம், டுவைன் பிரிடோரியஸ், மார்கோ யான்சென் ஆகிய 8 வீரர்களும் ஐபிஎல் போட்டியின் தொடக்க ஆட்டங்களில் விளையாட மாட்டார்கள் எனத் தெரிகிறது. 

ஐபிஎல் போட்டியில் விளையாடும் அனைத்து வீரர்களும் மூன்று நாள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அதன்பிறகுதான் கரோனா தடுப்பு வளையத்துக்குள் அவர்களால் நுழைய முடியும். இதன் காரணமாக ஒருநாள் தொடரில் பங்கேற்கும் வீரர்களால் ஐபிஎல் போட்டியின் ஆரம்ப ஆட்டங்களில் இடம்பெறுவது கடினம். 

மேலும் மார்ச் 31 முதல் ஏப்ரல் 12 வரை நடைபெறவுள்ள டெஸ்ட் தொடரில் என்ன நடக்கப் போகிறது என்று இதுவரை யாருக்கும் தெரியவில்லை. ஐபிஎல் போட்டியா, டெஸ்ட் தொடரா இரண்டில் எதைத் தேர்வு செய்வது என்பதை வீரர்களே முடிவு செய்துகொள்ளலாம் என தெ.ஆ. கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. வீரர்களின் முடிவைக் கொண்டு அவர்கள் எதற்கு விசுவாசமாக இருக்கிறார்கள் என்று தெரிந்துவிடும் என தெ.ஆ. டெஸ்ட் அணியின் கேப்டன் எல்கர் கூறியுள்ளார். ஒருநாள் தொடர் முடிந்த பிறகு டெஸ்டில் விளையாடாத வீரர்கள் ஐபிஎல் போட்டியில் கலந்துகொள்ளலாம் என தெ.ஆ. தேர்வுக்குழுத் தலைவர் விக்டர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். 

எனினும் ரபாடா, என்கிடி, வான் டர் டுசென், மார்க்ரம், யான்சென், நோர்கியா ஆகிய ஆறு தெ.ஆ. டெஸ்ட் வீரர்கள், டெஸ்ட் தொடரில் இடம்பெறுவார்களா அல்லது ஐபிஎல் போட்டியைத் தேர்வு செய்வார்களா என்கிற கேள்விக்கான விடை இதுவரை தெரியவில்லை. இதை விசுவாசப் பரீட்சையாக எல்கர் பார்ப்பதால் வீரர்களும் குழப்பத்தில் இருப்பதாகத் தெரிகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com