இந்தியாவுடனான இரண்டாவது டெஸ்ட் ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 109 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது.
இந்தியா, இலங்கை இடையிலான இரண்டாவது டெஸ்ட் ஆட்டம் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெறுகிறது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி 252 ரன்கள் எடுத்தது.
தொடர்ந்து, முதல் இன்னிங்ஸை ஆடிய இலங்கை அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 30 ஓவர்களுக்கு 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 86 ரன்கள் எடுத்திருந்தது. டிக்வெலா 13 ரன்களுடனும், எம்புல்டேனியா ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இதையும் படிக்க | ரூட் சதம்: மே.இ. தீவுகள், இங்கிலாந்து முதல் டெஸ்ட் டிரா
இந்த நிலையில் இரண்டாவது நாள் ஆட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கியது. இன்றைய ஆட்டத்தில் 35 பந்துகளில் மீதமுள்ள இலங்கை விக்கெட்டுகளை இந்திய அணி கைப்பற்றியது. டிக்வெலா 21 ரன்கள் எடுத்தார்.
இலங்கை அணி 109 ரன்களுக்கு ஆட்டமிழந்ததையடுத்து, இந்திய அணி 143 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியுள்ளது.
இந்திய அணித் தரப்பில் ஜாஸ்பிரித் பும்ரா 5 விக்கெட்டுகளையும், ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் முகமது ஷமி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், அக்சர் படேல் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.