இந்திய அணியில் அஜின்க்யா ரஹானே, சேத்தேஷ்வர் புஜாரா போன்றோர் இடங்களை நிரப்புகிறோம் என ஷ்ரேயஸ் ஐயருக்குத் தெரியும் என கேப்டன் ரோஹித் சர்மா பாராட்டு தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு எதிரான 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. பெங்களூருவில் நடைபெற்ற பகலிரவு டெஸ்ட் ஆட்டத்தின் வெற்றிக்குப் பிறகு பேசிய கேப்டன் ரோஹித் சர்மா இந்திய வீரர்கள் ஷ்ரேயஸ் ஐயர், ரவீந்திர ஜடேஜா, ரிஷப் பந்த் உள்ளிட்டோரை பாராட்டி பேசினார்.
இதையும் படிக்க | 2-0: பகலிரவு டெஸ்டில் இந்தியா அபார வெற்றி
ஷ்ரேயஸ் குறித்து கூறியதாவது:
"இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் விட்ட இடத்திலிருந்து டெஸ்ட் தொடரை தொடங்கியுள்ளார் ஷ்ரேயஸ். அதே ஃபார்மை டெஸ்ட் தொடருக்கும் அவர் எடுத்து வந்துள்ளார். ரஹானே மற்றும் புஜாரா போன்ற பெரிய வீரர்களின் இடங்களை நிரப்புகிறோம் என ஷ்ரேயஸுக்குத் தெரியும். அவருக்குத் தேவையான அனைத்தும் அவரிடமே உள்ளது."
இலங்கையுடனான பகலிரவு டெஸ்ட் ஆட்டத்தில் ஷ்ரேயஸ் இரண்டு இன்னிங்ஸிலும் அரைசதம் (92, 67) அடித்து அசத்தினார். இதன்மூலம், ஆட்டநாயகன் விருதையும் அவர் தட்டிச் சென்றார்.