குத்துச்சண்டை வீராங்கனையாக மாறியதற்காக தந்தை கூறிய வார்த்தைகள் பெரிதும் உதவியாக இருந்ததாக நிகாத் ஜரீன் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் நடைபெற்ற இஸ்தான்புல்லில் உலக குத்துச்சண்டை போட்டியில் 54 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த நிகாத் ஜரீன் தங்கப் பதக்கம் வென்றார். பின்னர் நாடு திரும்பிய அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அவரது வெற்றிக்கு மேரிகோம், சல்மான் கான் உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில், ஆங்கில ஊடகத்திற்கு நிகாத் ஜரீன் பேட்டியளித்தார். அவரிடம் சல்மான் கான் வாழ்த்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பேசிய அவர், அவர் எனக்கு நெருக்கமானவர் அல்ல. அத்தனை பெரிய நபர் எனக்கு வாழ்த்து தெரிவித்துள்ள சுட்டுரைப் பதிவைப் படிக்கும்போது என் கைகள் நடுங்கின. அதற்கு பதிலளிக்க தட்டச்சு செய்யும்போது நான் மிகவும் உணர்ச்சிவயப்பட்டேன். எனது கைகள் நடுங்கின. அவருடைய (சல்மான் கான்) பதிவு எனது நாளை சிறப்பாக்கியது என்று கூறினார்.
மேலும் பேசிய அவர், நான் குத்துச்சண்டை வீராங்கனையாவதற்கு முன்பு தடகள வீராங்கனையாக இருந்தேன். 100 மீட்டர், 200 மீட்டர் பந்தயங்களில் கலந்துகொண்டுள்ளேன். எனது மாவட்டத்தில் பயிற்சியாளர் இல்லாததால், எனது தந்தைதான் எனக்கு பயிற்சி அளித்தார். விளையாட்டின் பல துறைகளில் பெண்கள் இருந்தும் குத்துச்சண்டையில் மட்டும் குறைவாகவே இருப்பதாக உணர்ந்தேன்.
ஒருகட்டத்திற்கு மேல் ஏன் குத்துச்சண்டையில் அதிக அளவில் பெண்கள் இல்லை என்று என் தந்தையிடம் கேட்டேன். அவர் எனக்கு அளித்த பதில் அதிர்ச்சியாக இருந்தது. பெண்களும் குத்துச்சண்டை செய்யலாம். ஆனால் நமது சமூகம் பெண்களை மென்மையானவர்களாகவே சித்தரித்துவிட்டது என்று என் தந்தை கூறினார்.
அதன்பிறகு நான் ஆண் குழந்தையைப் போன்றே வளர்ந்தேன். என்னை ஒரு பெண் குழந்தையாக யாரும் நினைக்கமாட்டார்கள். எனது தந்தை கூறியது என் மனதில் பதிந்துவிட்டது. அதனை மாற்றிக்காட்ட வேண்டும் என்ற உறுதியோடு நான் பயிற்சிகளை தொடர்ந்தேன். என் தந்தையிடம் இதனைத் தெரிவித்தேன். அவர் என்னை குத்துச்சண்டை பயிற்சியில் சேர்த்துவிட்டார் என்று தன் தந்தை குறித்து பெருமையுடன் குறிபிட்டார் நிகாத் ஜரீன்.