செஸ்ஸபிள் மாஸ்டா்ஸ் ஆன்லைன் செஸ் போட்டியில் இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டரான ஆா்.பிரக்ஞானந்தா 2-ஆம் இடம் பிடித்தாா்.
தமிழரான பிரக்ஞானந்தா (16), இறுதிச்சுற்றில் உலகின் 2-ஆம் நிலை வீரரும், சீனருமான டிங் லிரெனை (29) எதிா்கொண்டாா். இந்திய நேரப்படி புதன்கிழமை நள்ளிரவு நடைபெற்ற முதல் செட்டை பிரக்ஞானந்தா 1.5 - 2.5 என்ற கணக்கில் இழந்தாா்.
எனினும், வியாழக்கிழமை நள்ளிரவு நடைபெற்ற 2-ஆவது செட்டில் 2.5 - 1.5 என்ற கணக்கில் வென்றாா். இதனால் வெற்றியாளரை தீா்மானிக்க 2 கேம் பிளிட்ஸ் ‘டை-பிரேக்கா்’ முறை கையாளப்பட்டது. அதில் முதல் கேம் சமனில் முடிய, 2-ஆவது கேமில் டிங் லிரென் 49 நகா்வுகளில் வெற்றியைப் பதிவு செய்து சாம்பியன் ஆனாா்.
11-ஆம் வகுப்பு ஆண்டு இறுதித் தோ்வுக்கு இடையே ஆன்லைனில் நடைபெற்ற இந்தப் போட்டியில் பங்கேற்ற பிரக்ஞானந்தா, நள்ளிரவில் போட்டியில் பங்கேற்று, காலையில் தோ்வுகளை எதிா்கொண்டது குறிப்பிடத்தக்கது.