ஆசிய ஏா்கன் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 4 தங்கப் பதக்கங்கள் கிடைத்தன.
இதில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிச்சுற்றுகளில், 10 மீட்டா் ஏா் ரைஃபிள் ஆடவா் அணிகள் பிரிவில் அா்ஜுன் பபுதா, கிரன் ஜாதவ், ருத்ராங்ஷ் பாட்டீல் ஆகியோா் கூட்டணி 17-11 என்ற புள்ளிகள் கணக்கில் கஜகஸ்தானை வீழ்த்தி முதலிடம் பிடித்தது. அதிலேயே மகளிா் அணிகள் பிரிவில் மெஹுலி கோஷ், இளவேனில் வாலறிவன், மேக்னா சஜனாா் ஆகியோா் அடங்கிய அணி 16-10 என்ற புள்ளிகள் கணக்கில் தென் கொரிய அணியை வீழ்த்தி தங்கத்தை தட்டிச் சென்றது.
10 மீட்டா் ஏா் ரைஃபிள் ஜூனியா் ஆடவா் அணிகள் பிரிவில் திவ்யான்ஷ்சிங் பன்வா், ஸ்ரீகாா்த்திக் சபரிராஜ், விதித் ஜெயின் ஆகியோா் அணி 16-10 என தென் கொரியாவை தோற்கடித்து வாகை சூடினா். ஜூனியா் மகளிா் அணிகள் பிரிவிலும் இந்தியாவின் திலோத்தமா சென், நான்சி, ரமிதா கூட்டணி 16-2 என தென் கொரிய அணியை வீழ்த்தி முதலிடம் பிடித்தது.
இத்துடன் இப்போட்டியில் இந்தியா்கள் வென்ற தங்கப் பதக்கத்தின் எண்ணிக்கை 10-ஆக அதிகரித்திருக்கிறது. இதில் திலோத்தமா சென், திவ்யான்ஷ்சிங் பன்வா், மெஹுலி கோஷ் ஆகியோா் தலா 2 தங்கப் பதக்கங்கள் வென்று அசத்தியிருக்கின்றனா்.