சிரமத்துக்கு வருந்துகிறோம்: ரசிகர்களின் புகாருக்கு ஜியோ சினிமா பதில்!
கால்பந்து உலகக் கோப்பை ஆட்டத்தின் ஒளிபரப்பு குறித்த ரசிகர்களின் புகார்களுக்கு ஜியோ சினிமா பதில் அளித்துள்ளது.
கத்தாரில் 22-ஆவது உலகக் கோப்பை கால்பந்து போட்டி ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாகத் தொடங்கியது. பல்வேறு கலைநிகழ்ச்சிகளைத் தொடா்ந்து நடைபெற்ற முதல் ஆட்டத்தில், போட்டியை நடத்தும் கத்தாா் - ஈகுவடாா் அணிகள் மோதின. கத்தாா் அரசா் ஷேக் தமிம் பின் ஹமத் அல்-தனி அதில் கலந்துகொண்டு போட்டியைத் தொடக்கி வைத்தாா். அத்துடன் முதல் ஆட்டத்தையும் அவா் நேரில் கண்டு களித்தாா். மைதானத்தில் மொத்தமாக 60,000 பாா்வையாளா்கள் திரண்டிருந்தனா். கத்தாா் - ஈகுவடாா் அணிகள் மோதிய முதல் ஆட்டத்தில், ஈகுவடாா் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஈகுவடாருக்கு 16-ஆவது நிமிஷத்தில் வழங்கப்பட்ட பெனால்டி கிக் வாய்ப்பை தவறவிடாமல் ஸ்கோா் செய்து, நடப்பு உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் முதல் கோலை அடித்தாா் வாலென்சியா. தொடா்ந்து, ஆட்டத்தின் 31-ஆவது நிமிஷத்தில் சக வீரா் பிரெசியாடோ தூக்கியடித்த பந்தை வாலென்சியா தலையால் முட்டி ஈகுவடாருக்காக 2-ஆவது கோல் அடித்தாா்.
இந்நிலையில் இந்தியாவில் ஜியோ சினிமா ஓடிடியிலும் ஸ்போர்ட்ஸ் 18 சேனலிலும் கால்பந்து உலகக் கோப்பையைக் காண முடியும். முதல் நாளன்று சமூகவலைத்தளங்களில் பல ரசிகர்கள், ஜியோ சினிமா ஓடிடியில் கால்பந்து ஆட்டத்தை சரிவர பார்க்க முடியவில்லை எனப் புகார் தெரிவித்தார்கள். ஆட்டத்தின் ஒளிபரப்பு அவ்வபோது அப்படியே நின்றுவிடுவதாலும் பலமுறை ஒளிபரப்பில் தடங்கல் ஏற்படுவதாலும் தங்களுடைய நிலையைச் சமூகவலைத்தளங்களில் வெளிப்படுத்தினார்கள். இதற்கு ட்விட்டரில் பதில் அளித்த ஜியோ சினிமா, ரசிகர்களே, உங்களுக்கு நல்ல அனுபவத்தைத் தருவதற்காகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். உங்களுடைய ஜியோ சினிமா செயலியை புதுப்பித்துக் கொள்ளுங்கள். சிரமத்துக்கு வருந்துகிறோம் எனக் குறிப்பிட்டது. மேலும் புகார் தெரிவித்த ரசிகர்களுக்கு அளித்த பதிலில், சிரமத்துக்கு வருந்துகிறோம். எங்களுடைய அணி இந்தப் பிரச்னையைக் கவனித்துக் கொண்டிருக்கிறது. எங்களுக்கு நீங்கள் மின்னஞ்சல் அனுப்பலாம். நாங்கள் உதவுவோம் என்று தெரிவித்தது.