டி20 உலகக் கோப்பை தகுதிச்சுற்றில் மேற்கிந்தியத் தீவுகள் அணியை 42 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அதிர்ச்சியளித்துள்ளது ஸ்காட்லாந்து அணி.
ஹோபர்டில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரர் ஜார்ஜ் அதிகபட்சமாக 66 ரன்கள் எடுத்தார். இந்த இலக்கை மே.இ. தீவுகள் எட்டிவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மார்க் வாட், பிராட் வீல், மைக்கேல் ஆகியோர் அருமையாகப் பந்துவீசி மே.இ. தீவுகள் பேட்டர்களைத் திணறடித்தார்கள். ஹோல்டரைத் தவிர எந்தவொரு பேட்டரும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. பலரும் சிக்ஸர் அடிக்க முயன்று அருமையான கேட்சுகளினால் ஆட்டமிழந்தார்கள். ஹோல்டர் மட்டும் தாக்குப்பிடித்து 38 ரன்களில் கடைசியாக ஆட்டமிழந்தார். மே.இ. தீவுகள் அணி முதல் தகுதிச்சுற்று ஆட்டத்தில் 18.3 ஓவர்களில் 118 ரன்களுக்கு ஆட்டமிழந்து, 42 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது. ஸ்காட்லாந்தின் மார்க் வாட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
நேற்று இலங்கையை நமீபியா தோற்கடித்த நிலையில் அடுத்த நாளே மற்றொரு முன்னாள் உலக சாம்பியனான மே.இ. தீவுகளை ஸ்காட்லாந்து வென்றுள்ளது. சர்வதேச டி20 ஆட்டத்தில் மே.இ. தீவுகள் அணியை முதல்முறையாக எதிர்கொண்ட ஸ்காட்லாந்து அபாரமான ஆட்டத்தால் வெற்றி பெற்று கிரிக்கெட் உலகின் கவனத்தைப் பெற்றுள்ளது.