நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-0 என முழுமையாக வென்றுள்ளது இந்திய ஏ அணி.
நியூசிலாந்து ஏ அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 நான்கு நாள் ஆட்டங்களிலும் 3 லிஸ்ட் ஏ ஆட்டங்களிலும் விளையாடியது. ஒருநாள் தொடர் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.
3-வது ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய ஏ அணி, 49.3 ஓவர்களில் 284 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கேப்டன் சஞ்சு சாம்சன் 54 ரன்கள், திலக் வர்மா 50 ரன்கள் எடுத்தார்கள். ஆல்ரவுண்டர் ஷர்துல் தாக்குர் 33 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 51 ரன்கள் எடுத்து அசத்தினார்.
நியூசிலாந்து ஏ அணி, முதல் விக்கெட்டுக்கு 52 ரன்கள் எடுத்தாலும் பிறகு தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்ததால் தடுமாறியது. விக்கெட் கீப்பர் பேட்டர் டேன் கிளெவர் நன்கு விளையாடி 83 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து ஏ அணி 38.3 ஓவர்களில் 178 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது. 19 வயது ஆல்ரவுண்டர் ராஜ் பவா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
3-வது ஒருநாள் ஆட்டத்தை 106 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய ஏ அணி ஒருநாள் தொடரை 3-0 என வென்றது.