குரூப் பி எலைட் பிரிவு ஆட்டத்தில் சௌராஷ்டிர அணியை 59 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது தமிழகம். தோல்வி அடைந்த நிலையிலும் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது சௌராஷ்டிரம்.
இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. முதல் இன்னிங்ஸில் தமிழகம் 324 ரன்களுக்கும், சௌராஷ்டிரம் 192 ரன்களையும் எடுத்தன. இரண்டாவது இன்னிங்ஸில் தமிழகம் 133 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சௌராஷ்டிர கேப்டன் ரவீந்திர ஜடேஜா அற்புதமாக பந்துவீசி 7 விக்கெட்டுகளை சாய்த்தாா்.
266 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்குடன் சௌராஷ்டிர அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. நான்கு ரன்களுடன் தனது ஆட்டத்தை அந்த அணி தொடா்ந்த நிலையில், வெள்ளிக்கிழமை 12-ஆவது ஓவரில் 18/4 என தடுமாறியது சௌராஷ்டிரம். ஹா்வித் தேசாய் 205 பந்துகளில் 101 ரன்களை அடித்தது வீணானது. அா்பித் 45 ரன்களை சோ்த்தாா். ரவீந்திர ஜடேஜா சரிவர ஆடாத நிலையில், சௌராஷ்டிர அணி தோல்வியைத் தழுவியது. 68.2 ஓவா்களில் 206 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தமிழக வீரா் அஜித் ராம் 6 விக்கெட்டுகளையும், சித்தாா்த் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினா். வெற்றி பெற்ற தமிழகத்துக்கு 6 புள்ளிகள் கிடைத்தன.
25 புள்ளிகளுடன் தமிழகம் 5-ஆவது இடத்தில் உள்ளது.