உலகக் கோப்பைத் தொடர் தனிப்பட்ட ஒருவரின் சாதனைகளுக்கு கவனம் கொடுக்கும் இடமாக இருக்கக் கூடாது என இந்திய அணியின் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பையில் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று (நவம்பர் 2) நடைபெற்ற போட்டியில் இந்தியா - இலங்கை அணிகள் மோதின. இந்தப் போட்டியில் இந்திய அணி 302 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. முதல் அணியாக அரையிறுதிக்கும் தகுதி பெற்றது. இந்தப் போட்டியில் இந்திய வேகப் பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இலங்கை அணி 55 ரன்களுக்கு சுருண்டது. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 357 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் தரப்பில் அதிகபட்சமாக ஷுப்மன் கில் (92 ரன்கள்), விராட் கோலி (88 ரன்கள்) மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் (82 ரன்கள்) எடுத்தனர். இவர்கள் மூவரும் சிறப்பாக விளையாடிய போதிலும் சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டனர்.
இதையும் படிக்க: உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி முகமது ஷமி சாதனை!
இந்த நிலையில், உலகக் கோப்பைத் தொடர் தனிப்பட்ட ஒருவரின் சாதனைகளுக்கு கவனம் கொடுக்கும் இடமாக இருக்கக் கூடாது என இந்திய அணியின் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: உலகக் கோப்பையில் வீரர்கள் அவர்களது நாட்டின் வெற்றிக்காக விளையாட வேண்டும். நீங்கள் உங்களது தனிப்பட்ட சாதனைகளுக்காக விளையாடக் கூடாது. சதங்கள் மற்றும் அரைசதங்கள் அடிக்காமல் தவறவிடுவது குறித்து நாங்கள் கண்டிப்பாக கவனத்தில் எடுத்துக் கொண்டு ஆலோசிப்போம். சில பந்துகளை ஷாட் அடிக்காமல் தவற விட்டேன். இல்லையெனில், சதம் அடித்திருக்கலாம். இருப்பினும், இன்னும் போட்டிகள் இருக்கின்றன. அந்தப் போட்டிகளில் இந்திய அணிக்காக சதமடிப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.