இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் புதிய தலைவராக பிரிஜ் பூஷண் சிங்கின் நெருங்கிய ஆதரவாளரான சஞ்சய் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேலும் ஒரு மல்யுத்த வீரர் தனது பத்மஸ்ரீ விருதினை திருப்பியளிப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் புதிய தலைவராக பிரிஜ் பூஷண் சிங்கின் நெருங்கிய ஆதரவாளரான சஞ்சய் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மல்யுத்த வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரிஜ் பூஷண் சிங்கின் ஆதரவாளர் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மல்யுத்தத்தில் இருந்து விலகுவதாக சாக்ஷி மாலிக் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து, ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீரரான பஜ்ரங் புனியா தனக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை திருப்பியளிப்பதாக தெரிவித்தார்.
இந்த நிலையில், காது கேளாதோருக்கான ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் வீரேந்தர் சிங் யாதவ் தனது பத்மஸ்ரீ விருதினை திருப்பியளிப்பதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவரது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: எனது சகோதரி மற்றும் இந்த நாட்டின் மகள் சாக்ஷி மாலிக்குக்கு ஆதரவாக நானும் எனது பத்மஸ்ரீ விருதினை திருப்பியளிக்கிறேன். மதிப்பிற்குரிய பிரதமர் நரேந்திர மோடி அவர்களே, நான் உங்களது மகள் மற்றும் எனது சகோதரி சாக்ஷி மாலிக்கை நினைத்து பெருமைப்படுகிறேன். இந்த விவகாரத்தில் பிரபல விளையாட்டு வீரர்களான சச்சின் டெண்டுல்கர் மற்றும் நீரஜ் சோப்ரா தங்களது கருத்தினைத் தெரிவிக்க வேண்டும். நாட்டில் உள்ள மிக முக்கிய வீரர்கள் இந்த விவகாரத்தில் தங்களது முடிவினைத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் எனப் பதிவிட்டுள்ளார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு வீரேந்தர் சிங் யாதவுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.