ஒடிசாவில் நடைபெற்று வரும் 15-வது ஹாக்கி உலகக் கோப்பைப் போட்டியைக் காண தமிழக விளையாட்டுத் துறை மற்றும் இளைஞர் நலன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒடிசா சென்றுள்ளார்.
ஆடவர்க்கான 15-வது உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டிகள் ஒடிசாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டிகள் ஜனவரி 13 முதல் ஜனவரி 29 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த நிலையில், தமிழக விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒடிசா சென்றுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது: ஒடிசா அரசாங்கத்தின் அழைப்பு மற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் அறிவுரையின் பேரில் ஒடிசாவில் நடைபெறும் ஹாக்கி உலகக் கோப்பைப் போட்டிகளைக் காண நேற்று (ஜனவரி 18) இங்கு வந்தேன். இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி ஒடிசாவில் உள்ள மேம்படுத்தப்பட்ட விளையாட்டு உள்கட்டமைப்புகளைப் பார்வையிட்டேன். எனக்கு விமான நிலையத்தில் உணவுத்துறை அமைச்சர் அட்டனு நாயக் மற்றும் ஒடிசா அரசின் செயலர் மதிவதனன் ஆகியோரால் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
கலிங்கா மைதானத்தில் விளையாட்டு வீரர்களுடனும், மைதானப் பணியாளர்களுடனும் உரையாடினேன். அதேபோல் ஒடிசாவில் உள்ள கால்பந்து மைதானம், உள்விளையாட்டு அரங்கம் , டென்னிஸ் மைதானம் மற்றும் நீச்சல் குளங்களைப் பார்வையிட்டேன்.
ஒடிசா அரசின் இந்த முயற்சிகளைப் பார்ப்பதில் மகிழ்ச்சியாக இருந்தது. அவர்கள் விளையாட்டுக்காக சிறப்பான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தியுள்ளது அருமை எனப் பதிவிட்டுள்ளார்.