உலகின் தலைசிறந்த அணியுடன் மோதவுள்ளது வங்கதேச அணியின் திறமைகளை சோதித்துக் கொள்ள கிடைத்திருக்கும் வாய்ப்பு என அந்த அணியின் உதவி பயிற்சியாளர் நிக் பொத்தாஸ் தெரிவித்துள்ளார்.
இந்த உலகக் கோப்பைத் தொடரில் இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடியுள்ள வங்கதேசம் ஒரு போட்டியில் வெற்றியையும், இரண்டில் தோல்வியையும் தழுவியுள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான நேற்றையப் போட்டியில் வங்கதேசம் தோல்வியடைந்தது. இந்த நிலையில், வங்கதேசம் தனது அடுத்தப் போட்டியில் இந்தியாவை எதிர்கொள்ள உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டி வருகிற அக்டோபர் 19-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், உலகின் தலைசிறந்த அணியுடன் மோதவுள்ளது வங்கதேச அணியின் திறமைகளை சோதித்துக் கொள்ள கிடைத்திருக்கும் வாய்ப்பு என அந்த அணியின் உதவி பயிற்சியாளர் நிக் பொத்தாஸ் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: நான் எங்கிருந்து தொடங்குவது. இந்தியா உலகின் தலைசிறந்த அணி. சொந்த மண்ணில் அவர்கள் விளையாடுகிறார்கள். எங்களைப் பொறுத்தவரை இந்தியாவுக்கு எதிரான ஆட்டம் எங்களது திறமைகளை சோதித்துக்கொள்ள கிடைத்திருக்கும் வாய்ப்பு. எங்களது திறமையை வெளிப்படுத்துவதற்கு ஆவலாக உள்ளோம். எங்களது வீரர்களுக்கு ஓய்வு எடுக்க நேரமிருக்கிறது. இந்தியாவுக்கு எதிரான போட்டிக்குத் தயாராக மனதளவிலும், உடலளவிலும் நாங்கள் போதுமான ஓய்வு நேரத்தை அவர்களுக்கு கொடுத்துள்ளோம் என்றார்.