2024ம் ஆண்டுக்கான டி-20 உலகக்கோப்பை தொடரில், தனது தொகுதியைச் சேர்ந்த சஞ்சு சாம்சனை தேர்வு செய்ததற்கு பிசிசிஐ-க்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், 2024ம் ஆண்டுக்கான டி-20 உலகக்கோப்பை தொடருக்கு சிறந்த அணியை தேர்வு செய்ததற்காக பிசிசிஐ தேர்வர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் என் தொகுதியைச் சேர்ந்தவர் தேர்வானதில் மகிழ்ச்சி. இறுதியில் சஞ்சு சாம்சனுக்கு தகுதியான இடம் கிடைத்துள்ளது. இந்தியாவுக்கு இந்த அணி வெற்றிக் கோப்பையை பரிசாக அளிக்கும் எனப் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், அரசியல் பணிகளில் நேரமின்றி உழைத்துவரும் சசி தரூர் சஞ்சு சாம்சன் ரசிகரா என்றும், தனது தொகுதியிலுள்ள வீரர் மட்டும் தேர்வானால் போதுமா? என்றும் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
சஞ்சு சாம்சனின் ரசிகர்களின் வாக்குகளைக் கவர்வதற்காக இதனை பதிவிட்டுள்ளதாகவும், சிலர் சசிதரூர் கருத்துக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று (ஏப். 30) அறிவித்துள்ளது. ரோஹித் சர்மா கேப்டனாகவும், ஹார்திக் பாண்டியா துணைக் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் படேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சஹால், அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் சிராஜ் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
ஷுப்மன் கில், ரிங்கு சிங், கலீல் அஹமது மற்றும் ஆவேஷ் கான் ஆகியோர் மாற்று வீரர்களுக்கான தெரிவில் இடம்பெற்றுள்ளனர்.
வருகிற ஜூன் 1 முதல் டி20 உலகக் கோப்பைத் தொடர் தொடங்கவுள்ளது.