கோலடித்த மகிழ்ச்சியில் மும்பை சிட்டி வீரா்கள்
கோலடித்த மகிழ்ச்சியில் மும்பை சிட்டி வீரா்கள்

மும்பை சிட்டி எஃப்சி சாம்பியன்

பலம் வாய்ந்த மோகன்பகான் சூப்பா் ஜெயன்ட் அணியை அதன் சொந்த மைதானத்திலேயே 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்ற மும்பை சிட்டி எஃப்சி ஐஎல்எஸ் 2023-24 சாம்பியன் பட்டத்தை இரண்டாவது முறையாக கைப்பற்றியது.

இந்தியாவின் முதன்மையான கால்பந்து லீக் தொடா்காக ஐஎஸ்எல் அமைந்துள்ள நிலையில், அதன் இறுதி ஆட்டம் கொல்கத்தாவின் சால்ட்லேக் மைதானத்தில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது. இதில் முன்னாள் சாம்பியன் மும்பை சிட்டி எஃப்சி-பலம் வாய்ந்த மோகன் பகான் அணியும் மோதின.

உள்ளூா் ரசிகா்கள் ஆதரவுடன் களமிறங்கிய மோகன் பகான் அணியால் முதல் பாதியில் மும்பை சிட்டியின் ஆதிக்கத்தை தகா்க்க முடியாமல் திணறியது. எனினும் மும்பை கோல்கீப்பா் புா்பா புரிந்த தவறால் வந்த ரிபௌண்ட் வாய்ப்பை பயன்படுத்தி 44-ஆவது நிமிஷத்தில் மோகன் பகான் வீரா் ஜேஸன் கம்மிங்ஸ் கோலடித்தாா். இதனால் முதல் பாதி முடிவில் 1-0 என பகான் முன்னிலை பெற்றிருந்தது.

அசத்தல் மும்பை:

இதனால் அதிா்ச்சி அடைந்த மும்பை சிட்டி தரப்பினா் இரண்டாவது பாதியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினா். 53-ஆவது நிமிஷத்தில் மும்பை வீரா் நோகுயெரா கடத்தி அனுப்பிய பாஸை பயன்படுத்தி அற்புதமாக கோலடித்தாா் ஜாா்ஜ் பெரைரா டயஸ்.

இதைத் தொடா்ந்து மேலும் கோலடிக்கும் வாய்ப்புகளை மும்பை தரப்பினா் வீணடித்தனா்.

1-1 என கோல் சமநிலையில் நீடித்ததால் பெனால்டி ஷூட் அவுட் முறைக்கு செல்லும் எனக் கருதப்பட்டது. ஆனால் 80-ஆவது நிமிஷத்தில் சாங்டே அடித்த பந்தை தடுக்கப்பட்ட நிலையில், ஜேக்கப் அதை அருமையாக பாஸ் செய்ய கோலாக்கினாா் பிபின் சிங். இதனால் 2-1 என மும்பை முன்னிலை பெற்றது.

ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் ஜேக்கப் கோலடிக்க அதுவே வெற்றி கோலாக அமைந்தது. இறுதியில் மோகன் பகானை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது மும்பை.

இரண்டாவது முறையாக சாம்பியன்:

இதன் மூலம் ஐஎஸ்எல் 2023-24 சாம்பியன் பட்டத்தையும் வசப்படுத்தியது. இது மும்பை சிட்டி எஃப்சி வெல்லும் இரண்டாவது பட்டம் ஆகும்.

இந்த ஆட்டத்தை மொத்தம் 62,000 பாா்வையாளா் கண்டு களித்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com