டி20 உலகக் கோப்பைப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது நியூசிலாந்து அணி. இதன்மூலம் கடந்த மூன்று வருடங்களில் மூன்று உலகக் கோப்பைப் போட்டிகளில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி. டி20 உலகக் கோப்பை இறுதிச்சுற்று நாளை நடைபெறுகிறது. ஆஸ்திரேலியாவும் நியூசிலாந்தும் மோதுகின்றன.
அரையிறுதியை வென்ற தருணத்தில் எல்லைக்கோட்டுக்கு வெளியே இருந்த நியூசிலாந்து வீரர்கள், வெற்றியைக் கொண்டாடினார்கள். ஆனால் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்த ஜிம்மி நீஷம் மட்டும் அமைதியாக அமர்ந்திருந்தார். இந்தப் படம் சமூகவலைத்தளங்களில் வெளியானது.
ஒரு பேட்டியில் ஜிம்மி நீஷம் கூறியதாவது:
அரையிறுதியில் வெற்றி பெற்ற தருணம் கொண்டாடப்பட வேண்டியது. ஆனால் அரையிறுதியில் வெல்வதற்காக உலகின் பாதி தூரத்தைக் கடந்து வரமாட்டீர்கள். இறுதிச்சுற்றில் வெல்வதே எங்களுடைய இலக்கு. இன்னும் ஓர் ஆட்டம் உள்ளது. அதை வெல்லும்போது பல உணர்வுகள் வெளிப்படும். கடந்த ஐந்தாறு வருடங்களாகச் சிறப்பாக விளையாடி வருகிறோம். வெற்றியோ தோல்வியோ அதைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு தொடர்ந்து ஆர்வத்துடன் விளையாடுவது எப்படி என எங்களுக்குத் தெரியும் என்றார்.