

திருநெல்வேலி, நவ. 8: திருச்செந்தூர்-சென்னை இடையேயான செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் திருச்சி, விழுப்புரம் வழியாகவே இயக்கப்படும் என ரயில்வே கால அட்டவணையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி-திருச்செந்தூர் இடையே அகல ரயில் பாதைப் பணிகள் முடிவடைந்த பிறகு, 8.2.2009 முதல் திருச்செந்தூரிலிருந்து சென்னைக்கு புதிய விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த ரயில் மதுரை, திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம் வழியாகச் சென்னைக்கு செல்கிறது. மயிலாடுதுறை- விழுப்புரம் அகல பாதைப் பணிகள் நிறைவடைந்ததும் இந்த ரயில் மயிலாடுதுறை வழியாக இயக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனிடையே, 2009 ஜூன் முடிய வெளியிடப்பட்ட ரயில்வே கால அட்டவணையிலும், இந்த ரயில் மயிலாடுதுறை வழியாக இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந் நிலையில், நவம்பர் 2009-ல் வெளியிடப்பட்டுள்ள புதிய கால அட்டவணையில் திருச்செந்தூர்-சென்னை விரைவு ரயில் தொடர்ந்து மதுரை, திருச்சி, விழுப்புரம் மார்க்கமாக வாராந்திர ரயிலாகவே இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயில் (எண் 6736) திருச்செந்தூரில் இருந்து வியாழன்தோறும் இரவு 7.15 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 8.55 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடையும்.
மறுமார்க்கத்தில் சென்னையில் இருந்து (எண் 6735) வெள்ளிதோறும் பிற்பகல் 2.40 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.40 மணிக்கு திருநெல்வேலிக்கு வரும். பின் இங்கிருந்து காலை 3.50 மணிக்குப் புறப்பட்டு காலை 6.15 மணிக்கு திருச்செந்தூர் சென்றடையும்.
இந்த ரயிலை தினசரி ரயிலாக இயக்க வேண்டும் என்ற கோரிக்கை பயணிகளிடையே வலுப்பெற்றுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.