உதகை, நவ. 11 வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், ஆனால் தமிழக அதிரடிப் படையினருக்கோ கிடைக்கும் வாய்ப்புகள் எல்லாம் சாதனைகள்தான். அதனால்தான் கோத்தகிரி அருகே கொணவக்கரை கிராமத்தில் ஏற்பட்ட மண் சரிவில் சுமார் 100 அடி ஆழத்தில் சிக்கியிருந்த இரு உடல்களை மீட்டதோடு, மலையடிவாரத்திலிருந்து அந்த உடல்களை தூக்கி செல்வதற்கு சாக்குப்பைகளாலான ஸ்டிரெச்சரை தாங்களே உருவாக்கி மீட்புப் பணியில் ஈடுபட்டு அனைவரையும் வியக்க வைத்தனர்.
முதல் பேரிடர் மீட்பு சம்பவம்: அதிரடிப்படை ஐஜி சைலேந்திரபாபுவின் உத்தரவின் பேரில் அதிரடிப்படை எஸ்பி கருப்புசாமி தலைமையில் 67 பேர் கொண்ட குழு நீலகிரிக்கு வந்துள்ளனர். செவ்வாய்க்கிழமை காலையில் இக்குழுவினர் சத்தியமங்கலத்திலிருந்து கோத்தகிரிக்கு வந்தனர். வரும் வழியில் சாலைகளிலிருந்த மண் சரிவுகளையும், பாறைகளையும் அகற்றி போக்குவரத்துக்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்தனர். இதற்கிடையே கொணவக்கரை ஆதிவாசி கிராமத்தில் ஏற்பட்ட மண் சரிவால் அங்கிருந்த ஒரு வீடு இடிந்து, அந்த வீட்டிலிருந்து ஒரு பெண் மண்ணுக்குள் புதையுண்டுவிட்டதாக இவர்களுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அதிரடிப் படையினர் அனைவரும் அப்பகுதிக்கு விரைந்து சென்றனர். தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்ததாலும், இடிபாடுகள் சுமார் 100 அடி ஆழத்தில் புதைந்து விட்டதாலும் மிகுந்த சிரமத்துக்கிடையே தங்கள் பணியை தொடங்கினர். சுமார் 2 மணி நேர முயற்சிக்கு பின்னர் ஒரு ஆண் உடலை மீட்டனர். இடிபாடுகளுக்குள் சிக்கியவர் பெண் என கூறப்பட்டதால் மீண்டும் தங்கள் பணியை தொடங்கினர். அப்போது அந்த ஆணின் உடலுக்கு அடியில் சிக்கியிருந்த பெண்ணின் உடலும் மீட்கப்பட்டது.
இதையடுத்து அதிரடிப் படையினர் தாங்கள் கொண்டு வந்திருந்த ஸ்டிரெச்சரில் அந்த ஆணின் உடலை எடுத்துச் சென்றனர். ஆனால் அந்த பெண்ணின் உடலை தூக்கிச் செல்ல ஸ்டிரெச்சர் இல்லாததால் காலியாக கிடந்த சிமெண்ட் சாக்குப் பைகளைக் கொண்டு, பக்கவாட்டில் இரு மரக்கிளைகளை வைத்து "திடீர்' ஸ்டிரெச்சரை தயார் செய்து அந்த உடலையும் மலையடிவாரத்ததிலிருந்து முக்கிய சாலைக்கு கொண்டு வந்து ஒப்படைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.