பஸ் கண்ணாடிகளில் விளம்பரம் செய்ய தடை: உயர் நீதிமன்றம்

சென்னை, நவ. 23:  அரசு பஸ்களில் ஜன்னல் மற்றும் பின்பக்க கண்ணாடிகளில் விளம்பரம் செய்வதற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.   கோவை நுகர்வோர் அமைப்பைச் சேர்ந்த கதிர்மதியோன் என்பவர் உயர் நீதிமன்ற
பஸ் கண்ணாடிகளில் விளம்பரம் செய்ய தடை: உயர் நீதிமன்றம்
Updated on
1 min read

சென்னை, நவ. 23:  அரசு பஸ்களில் ஜன்னல் மற்றும் பின்பக்க கண்ணாடிகளில் விளம்பரம் செய்வதற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

  கோவை நுகர்வோர் அமைப்பைச் சேர்ந்த கதிர்மதியோன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்:

  அரசு பஸ்களில் அனைத்துப் பக்கங்களிலும் விளம்பரம் செய்யப்படுகிறது. இதன் காரணமாக, வாகன ஓட்டிகளின் கவனம் சிதறி விபத்துகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் இதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று அதில் கோரப்பட்டது.

  இந்த மனு நீதிபதி எஸ்.ஜே. முகோபாத்யாய, நீதிபதி ஆர். சுதாகர் ஆகியோர் கொண்ட டிவிஷன் பெஞ்ச் முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

  மனுவை விசாரித்த பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

  பஸ்களில் உள்ளே இருப்பவர்களை மறைக்கும் விதத்தில் பக்கவாட்டுகளிலும், பின்பக்கக் கண்ணாடிகளிலும் விளம்பரம் செய்யப்படுகிறது.

  வாகன ஓட்டிகள் மற்றும் சாலைகளைப் பயன்படுத்துபவர்களின் கவனம் சிதறும் வகையில் பெரும்பாலான விளம்பரங்கள் அமைந்துள்ளன. இதன்காரணமாக, சாலை விபத்துகள் ஏற்படக்கூடும். சட்டப்படி, வாகனங்களில் விளம்பரம் செய்ய உரிய அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும். ஆனால், அரசு பஸ்களில் விளம்பரம் செய்வதற்கு எந்த அனுமதியும் பெறவில்லை என்று தெரிகிறது.

  இதுபோன்ற விளம்பரங்களால் பஸ்களின் உள்ளே என்ன நடக்கிறது என்பதை அறிய முடியாது. இதைப் பயன்படுத்தி தீவிரவாதிகளும், சமூக விரோதிகளும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடும்.

  அதேபோல், இந்த பஸ்களில் இரவு நேரங்களில் பயணிக்கும் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் உருவாகலாம்.

  எனவே, சட்டத்தை மீறி பஸ் ஜன்னல் மற்றும் பின்பக்க கண்ணாடிகளில் செய்யப்பட்டுள்ள விளம்பரங்களை அகற்ற வேண்டும்.

  பஸ்களுக்கு உள்ளேயும், ஜன்னல் கண்ணாடிகள் மற்றும் பின்பக்க கண்ணாடிகளுக்கு கீழேயும் விளம்பரம் செய்ய அனுமதி அளிக்கலாம். இதுபோன்ற விளம்பரங்களுக்கு போக்குவரத்து கழகங்கள் உரிய அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும்.

  பஸ்களில் செய்யப்படும் விளம்பரங்கள் ஆபாசமாகவோ, மற்றவர்களைப் புண்படுத்தும் வகையிலோ இருக்கக் கூடாது. இதற்கு ஏற்ற வகையில் மோட்டார் வாகனச் சட்டத்தை திருத்த வேண்டும்.

  மேற்கூறிய பரிந்துரைகள் கண்டிப்பாக அமல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com