மதுரை மாவட்டத்தில் பரவி வரும் "சிக்குன் குனியா'

மதுரை, செப். 12:  மதுரை மாவட்டத்தில் "சிக்குன்குனியா' வேகமாகப் பரவிவருகிறது. சுமார் 15 ஆயிரம்பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முறையான சிகிச்சை வசதி இல்லாததால் பலர் நடக்க
Updated on
1 min read

மதுரை, செப். 12:  மதுரை மாவட்டத்தில் "சிக்குன்குனியா' வேகமாகப் பரவிவருகிறது. சுமார் 15 ஆயிரம்பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முறையான சிகிச்சை வசதி இல்லாததால் பலர் நடக்க முடியாமல் வீட்டில் முடங்கியுள்ளனர்.

ஒருவகை கொசு மூலம் பரவும் இந்த வைரஸ் நோய்த் தாக்குதலுக்கு உள்ளானோர் காய்ச்சல், தலைவலி, மூட்டுவலி என பலவித பாதிப்புக்கு ஆளாகின்றனர். காய்ச்சல் காரணமாக சில நாள்களுக்கு நடக்க முடியாது; முறையான சிகிச்சை பெறாவிடில் உயிரிழப்பும் ஏற்படலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

மதுரை மாவட்டத்தில் சிந்தாமணி ஊராட்சி, மேலமடை, விளாச்சேரி, மதுரை நகரில் கரிமேடு, பொன்னகரம், மேலப்பொன்னகரம், புதூர் உள்ளிட்ட பகுதிகளில் முதியோர், பெண்கள், குழந்தைகள் என நூற்றுக் கணக்கானோர் சிக்குன்குனியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மதுரை அருகே உள்ள சிந்தாமணி ஊராட்சியில் முதலியார் தெரு, போஸ்டாபீஸ் தெரு, நடுத்தெரு, கிழக்குத் தெரு உள்ளிட்ட பகுதிகளில் சிக்குன்குனியா பாதிப்பு அதிகமிருப்பதைக் காணமுடிகிறது.

இங்குள்ள சுமார் 500 வீடுகளில் வீட்டுக்கு 2 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இப்பகுதி மக்கள் அனைவரும் அப்பள நிறுவனம், கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ள அன்றாடக் கூலிகள்.

தினமும் குறைந்த வருவாயில் குடும்பத்தை நடத்திவரும் இவர்கள், சிக்குன்குனியா நோய் பாதிப்பால் கால்கள் வீங்கி நடக்கமுடியாத நிலையில் உள்ளனர். இதனால் கூலி வேலைக்குச் செல்ல முடியாமல், வருவாய் இன்றி கடந்த 2 வாரங்களாக அவதிப்பட்டு வருகின்றனர்.

இப்பகுதியில் சுகாதாரத்தை மேம்படுத்தவோ, மருந்து மாத்திரைகளை அளிக்கவோ சுகாதார ஆய்வாளர்கள் யாரும் வரவில்லை என்கிறார் முன்னாள் கவுன்சிலரும் நோயால் பாதிக்கப்பட்டவருமான எஸ்.நடராஜன் (55).

சிக்குன்குனியா நோயாளிகள் தனியார் மருத்துவமனைகளுக்கே செல்கின்றனர். அங்கு நபருக்கு ரூ. 2,000 வரை செலவழித்தாலே, நோய் குணமாவதாகவும், பணமில்லாதவர்கள் 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வெள்ளளூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்குச் செல்லவேண்டியுள்ளது என்றும் கூறினர்.

ஆரம்பச் சுகாதார நிலையத்திலும் சாதாரண காய்ச்சலுக்கு உரிய மாத்திரைகள் தருவதால் நோய் பாதிப்பு குறையவில்லை என்றும் இதனால் வேறு வழியின்றி மதுரை கீழவெளிவீதி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சேர்ந்துள்ளதையும் காணமுடிகிறது.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு தினமும் 25 பேர் சிக்குன்குனியா நோய் பாதிப்புடன் வருகின்றனர்.

இதுகுறித்து மதுரை மாவட்ட சுகாதார துணை இயக்குநர் டாக்டர் பழனிச்சாமியிடம் கேட்டபோது, சிக்குன் குனியா பாதிப்பு ஜூன், ஜூலையில் வரும் என எச்சரிக்கப்பட்டிருந்தது. ஆனால், இதுவரை சிக்குன்குனியா நோய் பாதிப்பு குறித்து தகவல் இல்லை; எனவே பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு நடத்தப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com