சென்னை, அக். 5: பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி "இலட்சிய குடும்பம்' அமைப்பினரின் உண்ணாவிரதம் 4-வது நாளாக திங்கள்கிழமையும் தொடர்ந்தது.
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி அக்டோபர் 2-ம் தேதி முதல் "இலட்சிய குடும்பம்' என்ற தன்னார்வ அமைப்பைச் சேர்ந்தவர்கள் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர் உண்ணாவிரதத்தால் மயக்கமடைந்த 2 பெண்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்டனர்.
பாமகவினர் பேச்சுவார்த்தை... இந்த நிலையில், 4-வது நாளாக திங்கள்கிழமையும் தங்கள் போராட்டத்தை இலட்சிய குடும்பத்தினர் தொடர்ந்தனர்.
அவர்களுடன், பாமக தலைவர் ஜி.கே.மணி, எம்.எல்.ஏ.க்கள் தமிழரசு, நெடுஞ்செழியன் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும், அரசு தங்கள் கோரிக்கைக்கு செவிமடுக்கும் வரையில் போராட்டத்தைத் தொடரப் போவதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.
சட்டத்தை மீறக் கூடாது... அதிமுக ஆட்சியின் போது, 2003-ல் மது அருந்துவோரை வரைமுறைப்படுத்துவது தொடர்பாக சட்டம் கொண்டு வரப்பட்டது.
அதன்படி, "21 வயதுக்கு உட்பட்ட யாருக்கும் மது கொடுக்கக் கூடாது. அப்படி, யாராவது மது கேட்டு வந்தால், கடைக்காரர்கள் அவர்களின் வயதுச் சான்றை வாங்கிப் பார்த்த பிறகே மதுவை அளிக்க வேண்டும்' என்று சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
ஆனால், இன்று பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் இளைஞர்கள் கூட மதுவுக்கு அடிமையாகின்றனர் என்று தன்னார்வ அமைப்பைச் சேர்ந்தவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
2003-ல் கொண்டு வரப்பட்ட சட்டத்தை அரசு தீவிரமாக அமல்படுத்தினால், இளைஞர்கள் அதிகளவு மது பழக்கத்துக்கு ஆளாகாமல் தடுக்கலாம் என்றும் அவர்கள் கருத்துத் தெரிவித்தனர்.