திருச்சி: மூன்று பெட்டிகளுடன் மட்டுமே இயக்கப்பட்டு வரும் திருச்சி- காரைக்குடி பயணிகள் ரயிலில் கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருச்சி- காரைக்குடி இடையே கீரனூர், புதுக்கோட்டை, திருமயம் வழியாக தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் குமாரமங்கலம், கீரனூர், நார்த்தாமலை, வெள்ளனூர், புதுக்கோட்டை, நமணசமுத்திரம், திருமயம், செட்டிநாடு, கோட்டையூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
கடந்த சில ஆண்டுகள் வரை 6 பெட்டிகளுடன் இயக்கப்பட்டு வந்த இந்த ரயில், தற்போது வெறும் மூன்று பெட்டிகளுடன் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. நாளொன்றுக்கு அதிகபட்சமாக 250 பேர் மட்டுமே பயணம் செய்யும் வகையில் இந்த ரயில் இயக்கப்படுகிறது.
முதல் மற்றும் கடைசிப் பெட்டியில் பாதியளவு என்ஜின் பகுதியாக இருப்பதால் நடுவில் உள்ள ஒரு பெட்டியை மட்டுமே பயணிகள் முழுமையாகப் பயன்படுத்தி வருகின்றனர்.
காரைக்குடியில் இருந்து தினமும் காலை 6.35 மணிக்குப் புறப்படும் இந்த ரயில் (வண்டி எண். 830) காலை 9 மணிக்கு திருச்சியை வந்தடையும். எதிர் வழித்தடத்தில் (வண்டி எண். 831) தினமும் மாலை 6.15 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட்டு, இரவு 8.35 மணிக்கு காரைக்குடியை சென்றடையும்.
இந்த ரயில் காரைக்குடியில் இருந்து புறப்படும் போது காலை 7.25 மணிக்கும், திருச்சியில் இருந்து காரைக்குடி செல்லும்போது இரவு 7.28 மணிக்கும் புதுக்கோட்டை ரயில் நிலையத்தை அடைகிறது.
திருச்சியில் உள்ள கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கும், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோருக்கும் இந்த ரயில் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
வேலை நாள்களில் மூன்று பெட்டிகளிலும் கூட்டம் அதிகளவில் காணப்படுவதால், கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டநாள்களாக பயணிகள் மத்தியில் உள்ளது.
இதே வழித்தடத்தில் காலை நேரத்தில் திருச்சியில் இருந்து காரைக்குடி செல்ல வசதியாக காலை 6.15 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்படும் வகையிலும், காரைக்குடியில் இருந்து திருச்சிக்கு வர வசதியாக மாலை 6.30 மணிக்கு காரைக்குடியில் இருந்து புறப்படும் வகையிலும் ராமேசுவரம் பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
மூன்று பெட்டிகளுடன் மட்டுமே இயக்கப்பட்டு வரும் திருச்சி- காரைக்குடி பயணிகள் ரயிலில் பயணிகள் வசதிக்காக கூடுதல் பெட்டிகள் இணைக்க ரயில்வே நிர்வாகம் முன்வர வேண்டும் என பயணிகள் தரப்பிலும், சமூக அமைப்புகளும் கோரிக்கை விடுத்து வருகின்றன. ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதுகுறித்து திருச்சி ரயில்வே கோட்ட உயர் அதிகாரி ஒருவர் கூறியது:
"இந்த ரயில் இயக்கப்படுவது அனைத்தும் மதுரை கோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதால், இதுபற்றி நாங்கள் எந்த முடிவும் எடுக்க முடியாது. எங்களுக்கு வரும் கோரிக்கைகள் குறித்து மதுரை கோட்ட அலுவலகத்துக்கு தெரிவிப்போம்.
இந்த ரயிலைப் பொறுத்தவரை பெரிய பிரச்னை என்னவென்றால் கூடுதலாக ஒரு பெட்டி என இணைக்க முடியாது. இந்த வகை பயணிகள் ரயில் மூன்று அல்லது ஆறு பெட்டிகளைக் கொண்டதாகவே இருக்கும்.
எனவே, கூடுதலாக மூன்று பெட்டிகள் கொண்ட ஒரு ரயிலைத்தான் இணைக்க வேண்டும். இவ்வாறு இணைக்கும் பட்சத்தில் என்ன வசதி கிடைக்கும் என்றால் ஒரு ரயிலில் உள்ள என்ஜின் பழுதானாலும், மற்றொரு ரயிலில் உள்ள என்ஜின் மூலம் ரயிலை இயக்கிக் கொள்ளலாம். கூடுதல் பெட்டிகள் இணைப்பது பற்றி மதுரை கோட்ட அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.