சிமென்ட் விலை உயர்வால் கட்டுமானப் பணிகள் பாதிப்பு

பெரம்பலூர், மே. 2: பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 10 நாள்களில் சிமென்ட் மூட்டை ஒன்றின் விலை ரூ.100 அதிகரித்துள்ளதால், கட்டுமானப் பணிகள்  பாதிக்கப்பட்டுள்ளதோடு, கட்டடத் தொழிலாளர்கள் வேலையின்றி அவதிப்பட்
சிமென்ட் விலை உயர்வால் கட்டுமானப் பணிகள் பாதிப்பு
Updated on
1 min read

பெரம்பலூர், மே. 2: பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 10 நாள்களில் சிமென்ட் மூட்டை ஒன்றின் விலை ரூ.100 அதிகரித்துள்ளதால், கட்டுமானப் பணிகள்  பாதிக்கப்பட்டுள்ளதோடு, கட்டடத் தொழிலாளர்கள் வேலையின்றி அவதிப்பட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் வளர்ந்து வரும் மாவட்டங்களின் வரிசையில் உள்ள பெரம்பலூர் மாவட்டத்தில் கட்டுமானப் பணிகள் அதிக அளவில் நடைபெற்று வருகின்றன. இந்த மாவட்டத்தில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டடத் தொழிலாளர்கள் உள்ளனர்.

பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில்  சிமென்ட் தயாரிக்கத் தேவையான சுண்ணாம்பு கல் குவாரிகள் உள்ளதால், சுண்ணாம்புக் கல்லை மூலப் பொருள்களாகக் கொண்டு, அரியலூர் மாவட்டத்தில் 8 சிமென்ட் ஆலைகள் இயங்கி வருகின்றன.

இந்த மாவட்டத்திலிருந்து, நாள் ஒன்றுக்கு சுமார் 15 ஆயிரம் டன் சிமென்ட் மூட்டைகள் தமிழகத்தின் பிற பகுதிகள் மற்றும் கர்நாடகம் உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

இதனிடையே, கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு சிமென்ட் உற்பத்தியில் தேக்கம் ஏற்பட்டதால், சிமென்ட் மூட்டை ஒன்றின் விலை ரூ.200-க்கு  விற்பனை செய்யப்பட்டது. இதனால், கட்டுமானப் பணிகள் தீவிரமடைந்தன.

இந்நிலையில், கடந்த 10 நாள்களில் ரூ.80 முதல்  ரூ.100 வரை விலை உயர்த்தப்பட்டு, ரூ.200-க்கு  விற்கப்பட்ட சிமென்ட் மூட்டை ஒன்றின் விலை தற்போது, ரூ.300-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதனால், கட்டடப் பணியைத் தொடங்கியுள்ள நடுத்தர மக்கள், அதை முடிக்க முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும், கட்டட  ஒப்பந்ததாரர்கள் சிமென்ட் விலை உயர்வால் கட்டுமானப் பணிகளை நிறுத்தியதால், மாவட்டம் முழுவதும், கட்டுமானப் பணிகள் முடங்கியுள்ளன.

இதனால், ஆயிரக்கணக்கான கட்டடத் தொழிலாளர்கள் வேலையின்றி சிரமப்படுகின்றனர்.

இதேபோல, கட்டடப் பணிக்கான கட்டுமானக் கம்பியின் விலை கிலோவுக்கு ரூ.15 வரை உயர்ந்துள்ளதால், கட்டடப் பணிகள் முற்றிலும் முடங்கியுள்ளன.

சிமென்ட் ஆலையின் உரிமையாளர்கள் செயற்கையாக சிமென்ட் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி, தற்போது இந்த விலை உயர்வுக்கு வழிவகுத்துள்ளனர் என விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.

ஆனால், தமிழகத்தில் உற்பத்தியாகி, கர்நாடகத்துக்கு அனுப்பப்படும் சிமென்ட்  மூட்டை ஒன்று ரூ.200 -க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், தமிழகத்தில் மட்டும் சிமென்ட் விலை உயர்த்தப்பட்டுள்ளது, கட்டுமானப் பணியாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

நடுத்தர வர்க்கத்தினர் தங்களது கட்டடப் பணிகளை விரைந்து முடிக்க எண்ணியிருந்த நிலையில், தற்போது சிமென்ட் மூட்டை ரூ.100 வரை உயர்ந்துள்ளதால் செய்வதறியாது திகைத்துள்ளனர்.

எனவே, தமிழக அரசு இந்தப் பிரச்னையில் தலையிட்டு, சிமென்ட் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, முடங்கிப்போன கட்டுமானப் பணிகள் மீண்டும் தீவிரமடைவதோடு, நடுத்தர மக்களையும், கட்டடத் தொழிலை நம்பி வாழ்ந்து வரும் பல்லாயிரக்கணக்கான பணியாளர்களையும் காப்பாற்ற முடியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com