கிராமங்களுக்குச் செல்ல மறுக்கும் பஸ்கள்; அவதியில் நெல்லை கிராமப்புற மக்கள்

திருநெல்வேலி : திருநெல்வேலி புறநகர்ப் பகுதியில் உள்ள கிராமங்களுக்கு இயக்கப்படும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் முறையாக இயக்கப்படாததால், கிராம மக்கள் அவதியடைந்து வருகின்றனர். திருநெல்வேலி மாநகரைச் சுற்றி
கிராமங்களுக்குச் செல்ல மறுக்கும் பஸ்கள்; அவதியில் நெல்லை கிராமப்புற மக்கள்
Updated on
1 min read

திருநெல்வேலி : திருநெல்வேலி புறநகர்ப் பகுதியில் உள்ள கிராமங்களுக்கு இயக்கப்படும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் முறையாக இயக்கப்படாததால், கிராம மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

திருநெல்வேலி மாநகரைச் சுற்றி அதிகமான கிராமங்கள் உள்ளன. அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் மட்டும் 134 நகர பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில் பெரும்பான்மையானவை கிராமப்புறங்களுக்கே இயக்கப்படுகின்றன. ஆனால் அண்மைக்காலமாக நகர பஸ்கள் கிராமப்புறங்களுக்கு முறையாக இயக்கப்படுவதில்லை என்று புகார் கூறப்படுகிறது. இதனால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். குறிப்பாக, வல்லநாடு, தாழையூத்து, மானூர்,ஆலங்குளம்,பேட்டை,கருங்குளம்,சேரன்மகாதேவி பகுதிகளில் உள்ள கிராமங்களுக்குச் செல்லும் பஸ்கள் அடிக்கடி ரத்து செய்யப்படுவதாக அப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் அடக்கம்.

÷நெல்லையைப் பொறுத்தவரை அரசு பஸ்களுக்கு இணையாக, தனியார் பஸ்களும் இயங்குகின்றன. அரசு பஸ்கள் சரியாக இயக்கப்படாததற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன.

குறிப்பாக, அரசு பஸ் டிரைவர்கள் எண்ணிக்கைக் குறைவு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. இதேபோல விபத்து வழக்கு விசாரணைக்கு ஓட்டுநர்கள் ஆஜராக செல்வது, பஸ் பராமரிப்பு ஊழியர்கள் குறைவு, ஊழியர்கள் கோடை விடுமுறையில் இருப்பது என பல காரணங்கள் கூறப்படுகின்றன. இக் காரணங்களால் ஒரே நாளில் மட்டும் 4 பஸ்கள் இயக்கப்படாமல் பணிமனையில் நிறுத்தப்பட்டிருந்தனவாம்.

மேலும் பஸ் நிலையத்தில் இருக்கும் பயணிகள் கூட்டத்தை பொருத்து, பஸ்கள் வழக்கமாக செல்லும் வழித்தடத்தில் இருந்து வேறு வழித்தடத்துக்கு மாற்றிவிடப்படுவதால், அந்த பஸ்ûஸ எதிர்பார்த்து நிற்கும் பயணிகள் பாதிக்கப்படுகின்றனர். இதேபோல திருவிழா, முகூர்த்த காலங்களில் கிராமப்புறங்களுக்குச் செல்லும் பஸ்கள் எந்தவித முன்னறிவிப்புமின்றி திடீரென ரத்து செய்யப்பட்டு, பயணிகள் கூட்டம் இருக்கும் ஊருக்கு இயக்குவது அடிக்கடி நடக்கிறது.

இரவு நேரத்தில் பஸ்கள் ரத்து செய்யப்படுவதால், கிராமப்புற பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

பஸ்களை முறையாக இயக்க நடவடிக்கை எடுக்கக் கோரி அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் போதிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பயணிகள் புகார் கூறுகின்றனர். அரசு போக்குவரத்துக் கழகமும், தனியார் பஸ் நிறுவனங்களும் கிராம மக்கள் நலனைக் கருத்தில்கொண்டு பஸ்களை இயக்க முன் வர வேண்டும். விதிமுறைகளை மீறி இயங்கும் பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்க, அதிகாரிகள் தயக்கம் காட்டக்கூடாது என பயணிகள் வலியுறுத்துகின்றனர்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக திருநெல்வேலி பொது மேலாளர் சு. முருகன் கூறியதாவது:

பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு ஏற்றாற்போல, பஸ்களின் எண்ணிக்கையும் உயர்த்தப்பட்டு வருகிறது. கோடைக்காலம் என்பதால் பயணிகளின் எண்ணிக்கை ஒரு மடங்கு அதிகரித்துள்ளது. அதேவேளையில் போக்குவரத்துக் கழக ஊழியர்களும் அதிகமான பேர் கோடை விடுமுறையில் உள்ளனர். இந் நிலைமை கோடைக்காலம் முடிந்ததும் சீராகிவிடும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com