உதகை : நீலகிரி மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்டு வீடு இழந்தவர்களுக்கு நிரந்தர வீடு கட்டித் தருவதாக அரசு அறிவித்து ஒராண்டு கடந்துவிட்டது. ஆனால் இது வரை அதற்கான எத்தகைய முயற்சிகளும் மேற்கொள்ளப்படாதது பாதிக்கப்பட்டோரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் பெய்த பலத்த மழையால் 40க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததோடு, நூற்றுக்கணக்கானோர் வீடுகளையும், உடைமைகளையும் இழந்தனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பெரும் மண் சரிவுகளும், நிலப் பிளவுகளும் ஏற்பட்டு சரிவான பகுதிகளில் கட்டப்பட்டிருந்த பல வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன.
முழுமையாக வீடுகளை இழந்து பாதிக்கப்பட்ட 44 குடும்பங்களைச் சேர்ந்த மக்களுக்காக கேத்தி பகுதியில் தாற்காலிக வீடுகள் அமைத்து தரப்பட்டன. மொத்தம் 1968 வீடுகள் மழையால் ஓரளவு சேதமடைந்தவை என கணக்கெடுக்கப்பட்டன. உடனடியாக நிரந்தர வீடுகள் கட்டித் தரப்படுமெனவும், அதற்கான பணிகள் மழை முடிந்தவுடன் தொடங்குமெனவும் தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த அறிவிப்பு வெளியாகி சுமார் 11 மாதங்கள் முடிவடைந்து விட்டாலும், அறிவிப்பு காகிதங்களிலும், காற்றுடனும் மட்டுமே இருக்கிறது.
கடந்த ஆண்டில் உதகையில் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் ஸ்டாலின், நீலகிரி மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால் வீடிழந்தவர்களுக்காக நிரந்தர வீடுகள் கட்ட 59 கோடி மாவட்ட ஆட்சியர் மூலம் அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும், குடிசை மாற்று வாரியத்தின் மூலம் இவர்களுக்கு நிரந்தர வீடுகள் கட்டித் தரப்படுமெனவும் தெரிவித்தார். இத்திட்டத்தின் கீழ் தலா 3 லட்சம் மதிப்பில் 1,968 வீடுகள் கட்டித்தரப்படவுள்ளதாகவும் அறிவித்தபோது வாழ்த்தாத நெஞ்சங்களே இல்லை எனலாம். ஆனால், இந்த அறிவிப்பு ஓராண்டாகியும் வாய்மொழியாகவே உள்ளது.
இதற்கிடையே கலைஞர் வீட்டு வசதி திட்டத்தின்கீழ் மாவட்டத்தில் 68 வீடுகள் மட்டுமே கட்டித் தரப்படவுள்ளதாகவும், அதற்காக தலா 78,000 மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு கொடநாடு ஊராட்சிப் பகுதியில் கட்டி முடிக்கப்பட்ட 5 வீடுகளுக்கான சாவிகளையும் மத்திய அமைச்சர் ஆ.ராசா அண்மையில் வழங்கினார்.
மழையால் வீடிழந்தவர்களுக்கு நிரந்தர வீடுகள் கட்டும் திட்டம் என்ன ஆனது என்று தெரியவில்லை. கலைஞர் வீட்டு வசதி திட்டத்திலும் இவர்களது பெயர் இடம் பெறவில்லை. ஏனெனில் கலைஞர் வீட்டு வசதி திட்டத்தில் நகர்ப்புற பகுதிகள் சேர்க்கப்படவில்லை. நிரந்தர வீடுகள் கட்டுவதற்காக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்த இடங்களிலும் ஓராண்டாகியும் எவ்வித மேல் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. கேத்தி பகுதியில் இப்போது தாற்காலிக குடியிருப்புகளில் வசிக்கும் மக்களின் நிலையும் பரிதாபமாகவே உள்ளது. ஒரே அறையில் ஒரு குடும்பத்தினர் வசிக்கும்போது ஏற்படும் இன்னல்களை வெளியில் சொல்ல முடியாது, குறிப்பாக பெண்களின் நிலை மிகப் பரிதாபமாக உள்ளது.
ஒரு குடும்பத்தில் 5 பேர் இருந்தால் அவர்களில் ஒரு பெண் உடை மாற்ற வேண்டுமென்றால் மற்ற நால்வரும் வீட்டிற்கு வெளியேதான் நிற்க வேண்டிய அவலம் உள்ளதாக தாற்காலிக குடியிருப்புகளில் வசிப்போர் குமுறுகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை மட்டுமின்றி வடகிழக்கு பருவமழையும் அதிகளவில் உள்ள நிலையில் கடந்தாண்டில் வீடிழந்தவர்களுக்கே உரிய பதில் கிடைக்காத நிலையில், நடப்பாண்டிலும் மழை மிரட்டி வருவதால் ஆபத்தான பகுதிகளில் வசித்து வருவோருக்காக அரசு எத்தகைய நடவடிக்கைகளை எடுக்கப் போகிறது என்பது இன்னமும் விடை தெரியாத வினாவாகவே தொடர்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.