திருச்சி: திருச்சி-திண்டுக்கல் இடையே அகல ரயில் பாதையில் நடைபெற்று வரும் மின்மயமாக்கல் பணி எப்போது நிறைவு பெறும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது.
சென்னை- தென் மாவட்டங்கள் இடையே இயக்கப்படும் ரயில்களில் பெரும்பாலானவை, தென் மாவட்டங்களில் இருந்து வரும்போது திருச்சி வரை டீசல் என்ஜின் பொருத்தப்பட்டு இயக்கப்படுகிறது.
சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும்போது திருச்சி வரை மின்சார என்ஜின் பொருத்தப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது.
திருச்சி- சென்னை இடையே ஏறத்தாழ 28 ரயில்கள் இப்போது மின்சார என்ஜின் பொருத்தப்பட்டு இயக்கப்பட்டு வருகின்றன. இதனால், திருச்சி- சென்னை இடையே பயண நேரத்தில் ஏறத்தாழ 30 நிமிஷங்கள் வரை குறைந்துள்ளது.
இதையடுத்து, திருச்சி- மதுரை இடையே அகல ரயில் பாதையில் 271 கிலோ மீட்டர் தொலைவுக்கு மின்மயமாக்கல் பணி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. இதற்காக 100 கோடி நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
முதல் கட்டமாக, திருச்சி- திண்டுக்கல் இடையே பணியை விரைந்து முடிக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. இதற்காக, வையம்பட்டி, திண்டுக்கல் ஆகிய இடங்களில் துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இருப்பினும், பணிகள் தாமதமாக நடைபெற்று வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால், ரயில்வே தரப்பினரோ பணி முடியும் தருவாயை எட்டிவிட்டதாக தெரிவிக்கின்றனர்.இந்தப் பாதையில் 5,400 மின் கம்பங்கள் அமைக்கப்பட்டு, 300 கிலோ மீட்டர் தொலைவுக்கு செப்பு மின் வயர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் பணிகள் எப்போது நிறைவு பெறும் என்ற எதிர்பார்ப்பு திருச்சி, திண்டுக்கல் பகுதி மக்களிடையே ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் பணிகள் முடிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து ரயில்வே மின்மயமாக்கல் பிரிவு உயர் அதிகாரி ஒருவர் கூறியது:
"திருச்சி- திண்டுக்கல் இடையே மின்மயமாக்கல் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. 90 சதவீத பணிகள் முடிந்துவிட்டன. ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் தகுதிச் சான்றிதழ் கிடைக்க வேண்டும்.
அக்டோபர் மாத இறுதியில் ரயில்வே பாதுகாப்பு ஆûணையர் இந்தப் பாதையில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். அவர் தகுதிச் சான்றிதழ் அளித்தவுடன் நவம்பர் மாதத்துக்குள் திருச்சி- திண்டுக்கல் இடையே மின்சார என்ஜின் பொருத்தப்பட்ட ரயில்கள் இயக்கப்பட வாய்ப்பு உள்ளது.
இதேபோல, 2011-ம் ஆண்டு மார்ச் மாத இறுதிக்குள் திண்டுக்கல்- மதுரை இடையேயான மின்மயமாக்கல் பணியை முடிக்கத் திட்டமிட்டுள்ளோம். இந்தப் பணிகள் முடிந்தால் திருச்சி- மதுரை இடையே ஏறத்தாழ 20 முதல் 30 நிமிஷங்கள் வரை பயண நேரம் குறைய வாய்ப்பு உள்ளது' என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.